இப்படி பண்றீங்களேம்மா... கியா செல்டோஸ் கனவில் இருப்போருக்கு ஏமாற்றத்தை தரும் செய்தி!
கொரோனா ஒரு பக்கம் வாட்டி எடுத்து வரும் நிலையில், செல்டோஸ் காரை புக்கிங் செய்ய இருப்பவர்களுக்கு ஏமாற்றமான தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

டந்த ஆண்டு ஆகஸ்ட்டில் கியா மோட்டார் நிறுவனம் செல்டோஸ் எஸ்யூவியுடன் இந்திய மார்க்கெட்டில் அடியெடுத்து வைத்தது. முதல் மாடலாக வந்த செல்டோஸ் விற்பனையில் அதகளம் கட்டி வருகிறது. இந்த காருக்கு இருக்கும் வரவேற்பு பல போட்டியாளர்களை மிரள வைத்துள்ளது.

ரூ.9.69 லட்சம் முதல் ரூ.15.99 லட்சம் வரையிலான சாவாலான விலையில் அறிமுகம் செய்யப்பட்ட கியா செல்டோஸ் எஸ்யூவி டிசைனில் மிக அட்டகாசமாக இருப்பதால் வாடிக்கையாளர்களை பெரிதும் ஈர்த்தது.

இரண்டு பெட்ரோல், ஒரு டீசல் எஞ்சின் தேர்வுகளிலும், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளும் வாடிக்கையாளர்களின் தேர்வுக்கு எளிதாகி உள்ளது. பிஎஸ்6 தரத்திலும் வந்ததுடன், வசதிகளிலும் அசத்துகிறது.

இந்த நிலையில், கடந்த ஜனவரியில் வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு பரிசாக செல்டோஸ் எஸ்யூவியின் விலையை ரூ.15,000 முதல் 50,000 வரை உயர்த்தியது கியா மோட்டார் நிறுவனம். தற்போது மீண்டும் விலையை கணிசமாக உயர்த்த கியா மோட்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

செல்டோஸ் எஸ்யூவியின் விலையை ரூ.35,000 முதல் ரூ.50,000 வரை உயர்த்துவதற்கு கியா மோட்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக காடிவாடி தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. அதாவது, வேரியண்ட்டுகளுக்கு தக்கவாறு கணிசமாக விலை உயர்வு இருக்கும். அதேநேரத்தில், விலை உயர்வுக்காக சில கூடுதல் அம்சங்களை வேரியண்ட்டுகளை சேர்த்து வழங்க கியா மோட்டார் திட்டமிட்டுள்ளது.

கொரோனா பிடியில் சிக்கி வாடிக்கையாளர்களும், மக்களும் பல நெருக்கடிகளை சந்தித்து வரும் இந்த சூழலில் கியா மோட்டார் நிறுவனம் மீண்டும் செல்டோஸ் விலையை உயர்த்த இருப்பதாக வெளியாகி உள்ள தகவல் புக்கிங் செய்து காத்திருக்கும் வாடிக்கையாளர்களையும், புக்கிங் செய்ய திட்டமிட்டிருப்பவர்களுக்கும் ஏமாற்றத்தை தரும் வகையில் உள்ளது.

பொதுவாக, ஒரு மாடல் ஹிட் அடித்துவிட்டால் அதன் விலையை தொடர்ந்து உயர்த்துவது கூட ஒரு வழமையான முறையாக கார் நிறுவனங்களால் கடைபிடிக்கப்படுகின்றன. ஆனால், தற்போதுள்ள கொரோனா சூழலில், செல்டோஸ் விலை கணிசமாக உயர்த்தப்பட உள்ளதாக வெளியானத் தகவல் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் நெருக்கடியை அளிக்கும். ஆனால், இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை இல்லை.

விலை அதிகரிக்கப்பட்டாலும் தொடர்ந்து மதிப்பு வாய்ந்த தேர்வாக செல்டோஸ் எஸ்யூவி அமையும் என்பதில் சந்தேகமில்லை. மேலும், கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவலும் கூடுதல் மதிப்பை வழங்கும்.


Click it and Unblock the Notifications








