சொனெட் எஸ்யூவியின் காத்திருப்பு காலத்தை கட்டுக்குள் வைக்க கியா முயற்சி!
அண்மையில் விற்பனைக்கு வந்த புதிய சொனெட் எஸ்யூவியின் காத்திருப்பு காலத்தை கட்டுக்குள் வைப்பதற்கான முயற்சிகளில் கியா மோட்டார் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

தென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார் நிறுவனம் மிக குறுகிய காலத்தில் இந்தியாவில் முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்றாக மாறி விட்டது. செல்டோஸ், கார்னிவல் கார்களை தொடர்ந்து சொனெட் என்ற சப்-காம்பேக்ட் எஸ்யூவியை அண்மையில் விற்பனைக்கு கொண்டு வந்தது.

இந்த எஸ்யூவிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் பார்வையிலேயே சுண்டி இழுக்கும் டிசைன், தொழில்நுட்ப வசதிகள், ஏராளமான எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வுகள் ஆகியவற்றுடன் ரூ.6.71 லட்சம் என்ற மிக சவாலான விலையில் வந்ததால், இந்திய வாடிக்கையாளர்கள் அதிக வரவேற்பை தந்துள்ளனர்.

கடந்த மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு முதல் 12 நாட்களிலேயே 9,266 சொனெட் கார்கள் விற்பனையாகி உள்ளன. மேலும், கியா சொனெட் காரின் சில வேரியண்ட்டுகளுக்கு 2 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் நிலவுகிறது. மறுபுறத்தில் புக்கிங் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவு இருந்து வருவதால், காத்திருப்பு காலத்தை கட்டுக்குள் வைப்பதற்கான திட்டங்களை செயல்படுத்த கியா மோட்டார் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

அதாவது, ஆந்திர மாநிலம் அனந்த்பூரில் செயல்பட்டு வரும் கியா மோட்டார் ஆலையில் மூன்றாவது ஷிஃப்ட்டிலும் கார் உற்பத்தியை துவங்குவதற்கான முயற்சிகளில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அனந்த்பூர் ஆலையில் மூன்றாவது ஷிஃப்ட்டிலும் கார் உற்பத்தி துவங்கப்பட்டால், கியா சொனெட் எஸ்யூவியின் காத்திருப்பு காலத்தை அதிகம் செல்லாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

அதேநேரத்தில், கொரொனா பிரச்னை காரணமாக, இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் சில நடைமுறைகள் சிக்கல்கள் உள்ளன. இதுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் கியா மோட்டார் விற்பனைப் பிரிவு தலைவர் மனோகர் பட் கூறியிருப்பதாவது," தேவைக்கு தக்கவாறு உற்பத்தியை அதிகரிப்பது பற்றி முடிவு எடுக்கப்படும். செல்டோஸ் காருக்கு புக்கிங் அதிகரித்ததால், உடனடியாக அனந்த்பூர் ஆலையில் இரண்டாவது ஷிஃப்ட்டில் உற்பத்தியை துவங்கினோம்.

எங்களது ஆலையில் முழு அளவில் உற்பத்தியை செய்வது என்பதே எங்கள் கனவு. ஆனால், தற்போது கொரோனாவால் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. மூன்றாவது ஷிஃப்ட்டில் உற்பத்தியை துவங்குவதற்கு சப்ளையர்களும் அதற்கு ஏற்ப தயாராக இருக்க வேண்டும்.

காரில் பயன்படுத்தப்படும் ஒரு போல்ட் -நட் சப்ளை செய்வதில் தாமதம் ஏற்பட்டால் கூட, ஒட்டுமொத்த கார் உற்பத்தியும் பாதிக்கப்படும். எனவே, நிலைமை சீராக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். சப்ளையர்களை பொறுத்தே மூன்றாவது ஷிஃப்ட்டில் உற்பத்தி செய்வது தீர்மானிக்கப்படும்," என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மூன்றாவது ஷிஃப்ட்டில் கார் உற்பத்தியை துவங்குவதற்காக சப்ளையர்களின் நிலை மற்றும் வாய்ப்புகள் குறித்து கியா மோட்டார் தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாக தெரிகிறது. நடைமுறைகள் சிக்கல்கள் தீர்ந்தவுடன் மூன்றாவது ஷிஃப்ட்டில் உற்பத்தி துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








