மாஸ்... நம்ப முடியாத சம்பவத்தை அசால்டாக செய்த கியா... வேர்த்து விறுவிறுத்து போன போட்டி நிறுவனங்கள்
கியா நிறுவனம் இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதம் மிக பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.

இந்திய சந்தைக்கு புது வரவான கியா மோட்டார்ஸ், முதல் மூன்று தயாரிப்புகளின் மூலமே இங்கு வலுவாக காலூன்றி விட்டது. இந்திய சந்தைக்கான கியா நிறுவனத்தின் முதல் தயாரிப்பான செல்டோஸ் எஸ்யூவி கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. 2வது தயாரிப்பான கார்னிவல் எம்பிவி, நடப்பாண்டு பிப்ரவரியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவின் மூலம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

மூன்றாவது தயாரிப்பான சொனெட் காம்பேக்ட் எஸ்யூவி கடந்த செப்டம்பர் மாதம் 18ம் தேதி, இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கப்பட்டது. தற்போதைய நிலையில் இந்த 3 கார்களை மட்டுமே கியா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. ஆனால் இந்த மூன்று கார்களும், தங்களது செக்மெண்ட்டில் சிறப்பாக விற்பனையாகின்றன.

இதன் மூலமாக இந்திய சந்தையில் மிக வலுவான அஸ்திவாரத்தை கியா அமைத்துள்ளது. கடந்த செப்டம்பர் மாத விற்பனை நிலவரம், அதற்கு ஒரு ஆணித்தரமான சாட்சி. கடந்த செப்டம்பர் மாதம், இந்தியாவில் தங்களது அதிகபட்ச விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளதாக, கியா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

புது வரவான சொனெட் கார், காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் செலுத்த தொடங்கியுள்ள ஆதிக்கமே இந்த சாதனைக்கு மிக முக்கியமான காரணம் என்றால் மிகையல்ல. கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கியா மோட்டார்ஸ் நிறுவனம் வெறும் 7,554 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 18,676 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கடந்த செப்டம்பர் 18ம் தேதி விற்பனைக்கு வந்த கியா சொனெட்தான் இந்த பிரம்மாண்ட வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்துள்ளது. விற்பனைக்கு வந்த வெறும் 12 நாட்களிலேயே, 9,266 சொனெட் கார்களை கியா நிறுவனம் விற்பனை செய்து அசத்தியுள்ளது. வரும் நாட்களில் கியா சொனெட் காரின் விற்பனை எண்ணிக்கை இன்னும் உயர்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக தென்படுகின்றன.

அதே சமயம் இந்திய சந்தைக்கான கியா நிறுவனத்தின் முதல் தயாரிப்பான செல்டோஸ் எஸ்யூவி காரும் தனது ஆதிக்கத்தை தொடர்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் 9,079 செல்டோஸ் எஸ்யூவி கார்களை கியா விற்பனை செய்துள்ளது. கியா நிறுவனத்தின் இந்த பிரம்மாண்ட விற்பனை எண்ணிக்கை, இந்திய ஆட்டோமொபைல் துறை சரிவில் இருந்து மீள்வதற்கான அறிகுறியாகவும் பார்க்கப்படுகிறது.

கடந்த மார்ச் மாத இறுதியில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கிற்கு பின்னர், இந்தியாவில் கார்களின் விற்பனை மிக கடுமையாக சரிவடைந்தது. குறிப்பாக கடந்த ஏப்ரல் மாதத்தில், கார்களின் விற்பனை அதலபாதாளத்திற்கு சென்றது. எனினும் கடந்த ஒரு சில மாதங்களாக கார்களின் விற்பனை ஓரளவிற்கு சிறப்பாக இருந்து வருகிறது.

தீபாவளி பண்டிகை காலம் நெருங்கி வருவதாலும், கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மக்கள் பொது போக்குவரத்திற்கு பதில் கார்களில் பயணம் செய்வதை பாதுகாப்பாக கருதுவதாலும், வரும் மாதங்களில் கார்களின் விற்பனை நல்ல வளர்ச்சியை பதிவு செய்யும் என்பது ஆட்டோமொபைல் துறையை சேர்ந்த வல்லுனர்களின் கணிப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications








