சரக்கு இரயிலில் டெல்லிக்கு சென்ற செல்டோஸ் கார்கள்... புதிய போக்குவரத்து முயற்சியில் இறங்கிய கியா...
ஊரடங்கின் காரணமாக சாலை போக்குவரத்து இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாததாலும், இரயில் போக்குவரத்து விரைவாக இருக்கும் என்ற காரணத்தினாலும், 100 கியா செல்டோஸ் கார்கள் ஆந்திராவில் இருந்து டெல்லிக்கு சரக்கு இரயில் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

கியா செல்டோஸ் போன்ற கார்கள் மட்டுமின்றி ட்ரக் போன்ற கனரக வாகனங்கள் பெரும்பாலும் சாலை போக்குவரத்தின் மூலமாகவே ஒரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்பி வைக்கப்படும். ஆனால் உண்மையில் இரயில் போக்குவரத்தே இவ்வாறான பணிகளை விரைவாகவும் சிக்கலின்றியும் முடித்து கொடுக்கக்கூடியவை.

அதுவும் கொரோனாவினால் தற்போது உள்ள இக்கட்டான சூழ்நிலையில் இரயில் போக்குவரத்தையே பெரும்பாலான வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தேர்ந்தெடுக்க திட்டமிட்டுள்ளன. ஏனெனில் சில மாநிலங்களில் கொரோனாவினால் போடப்பட்ட போக்குவரத்து தடைகள் இன்னும் தீவிரமாகவே உள்ளது.

அதாவது ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்ல அந்த மாநிலத்தின் அதிகாரிகளிடம் இ-பாஸ் உள்ளிட்ட ஆவணங்களை பெற வேண்டியுள்ளதால் போக்குவரத்திற்கு இரயில் வழித்தடமே ஆட்டோமொபைல் நிறுவனங்களின் முதன்மையான தேர்வாகவும், சில நேரங்களில் ஒரே தேர்வாகவும் உள்ளது.

இந்த வகையில் தான் கியா மோட்டார்ஸ் நிறுவனம் ஆந்திராவில் உள்ள தனது அனந்த்புர் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட செல்டோஸ் எஸ்யூவி கார்களை சரக்கு இரயில் மூலமாக தலைநகர் டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளது.
கடந்த மே31ஆம் தேதியில் இருந்து இந்த போக்குவரத்திற்கான வேலைகளில் ஈடுப்பட்டு வந்த இந்த நிறுவனம் ஆந்திரா, பெனுகொண்டா பகுதியில் இருந்து 100 யூனிட் செல்டோஸ் கார்களை அனுப்பியுள்ளது. மார்ச் மத்தியில் இருந்து 1.5 மாத காலமாக கியா நிறுவனத்தின் தயாரிப்பு பணிகள் ஊரடங்கினால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

கடந்த மே மாத இரண்டாம் வாரத்தில் இருந்து இந்நிறுவனத்தின் தயாரிப்பு மற்றும் விற்பனை பணிகள் மீண்டும் துவங்கியதால் கடந்த மாதத்தில் மட்டும் 1,611 யூனிட் கியா செல்டோஸ் கார்கள் விற்பனையாகியுள்ளன. தற்போது சென்றுள்ள 100 யூனிட்கள் முதல் பேட்ஜ் தான்.

இதனால் இதேபோன்று இரயில் மூலமாக அடுத்தடுத்த பேட்ஜ்களும் அனுப்பி வைக்கப்படவுள்ளன. செல்டோஸை பற்றி கூற வேண்டுமென்றால், கடந்த ஆண்டு இறுதியில் இந்திய சந்தையில் காலடி எடுத்து வைத்த கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் இந்திய அறிமுக மாடலாகும்.

அதன்பின் இந்நிறுவனத்தில் இருந்து இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இரண்டாவது அறிமுகமாக கார்னிவல் எம்பிவி கார் களமிறங்கியது. இவற்றை தொடர்ந்து 2020 இறுதிக்குள் சொனெட் என்ற பெயரில் காம்பெக்ட் எஸ்யூவி மாடலும் கியா நிறுவனத்தில் இருந்து வெளிவரவுள்ளது.

கொரோனா வைரஸினால் இந்திய ஆட்டோமொபைல் துறை மிக பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதியில் நின்றுள்ள டீலர்களுக்கும் தயாரிப்பு நிறுவனங்களுக்குமான சப்ளை சங்கிலியை மீண்டும் புதுபிக்க கியா போன்ற முன்னணி நிறுவனங்கள் இவ்வாறான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.

அதேநேரம் இந்தியன் இரயில்வே துறையும் இந்த சூழ்நிலையில் உதவும் விதமாக எஸ்யூவி, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களை தகுந்த பாதுகாப்பு வழிமுறைகளோடு இடம் பெயர செய்ய முன்வந்திருப்பது நிச்சயம் பாராட்டத்தக்கது. இது இரண்டு துறைக்களுக்கும் பயனளிக்கக்கூடியதாகும்.


Click it and Unblock the Notifications








