ஆட்டோ எக்ஸ்போ 2020: வில்லன் தோற்றமுடைய இரு ஆஃப் ரோடர் கியா கார்கள் அறிமுகம்... சிறப்பு தகவல்!
கியா நிறுவனம் செல்டோஸ் அடிப்படையிலான இரு ஆஃப்ரோடர் கார்களை ஆட்டோ எக்ஸ்போ 2020-ல் காட்சிப்படுத்தியுள்ளது. இந்த கார்குறித்த கூடுதல் சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.

தென்கொரியாவை மையமாகக் கொண்டு இயங்கும் கியா நிறுவனம், இந்தியாவில் கால் தடம் பதித்து குறுகிய காலங்களே ஆகின்றன. ஆனால், நீண்ட ஆண்டுகளாக சந்தையில் இருப்பதைப் போன்ற அதீத வரவேற்பையும், மிகப்பெரிய சந்தையையும் அது இந்தியாவில் பெற்று வருகின்றது.

குறிப்பாக அந்நிறுவனம் சில நாட்களுக்கு முன்னர்தான் இந்தியாவிற்கான இரண்டாம் மாடலான கியா கார்னிவல் எம்பிவி மடாலை அறிமுகம் செய்தது.
இதைத்தொடர்ந்து, பல்வேறு கார்களையும் களமிறக்க அது திட்டமிட்டிருக்கின்றது.

இதற்கான பிள்ளையார் சுழியாக தற்போது நொய்டாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வாகன கண்காட்சியில் புதிய எக்ஸ்-லைன் ட்ரையல் அட்டாக் மற்றும் எக்ஸ்-லைன் அர்பன் ஆகிய கான்செப்ட் மாடல்களை காட்சிப்படுத்தியுள்ளது. இந்த கார்களை தற்போது விற்பனையில் சதம் அடித்துக் கொண்டிருக்கும் செல்டோஸ் எஸ்யூவி-யை தழுவி உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆனால், தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இரு கான்செப்ட் கார்களும் ஆஃப் ரோட் வாகனங்களுக்கான பிரத்யேக வசதியைப் பெற்றிருக்கின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்த காரின் அனைத்து வீல்களுக்கும் இயங்கும் திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த எஸ்யூவி ரக ஆஃப்-ரோடு வாகனத்தை கியா காட்சிப்படுத்துவது முதல் முறையல்ல. ஏற்கனவே, லாஸ் ஏஞ்ஜல்ஸில் நடைபெற்ற 2019 வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்தது. இதைத்தொடர்ந்து, தற்போது இந்தியாவில் அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கப்படும்போது இரண்டு வீல்கள் இயக்கம் கொண்ட மாடலாகதான் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ஆனால், டிசைனிங்கில் எந்தவொரு மாற்றமும் இருக்காது என தெரிகின்றது.

இந்த கார் தற்போது ஹார்ட்கோர் ஆஃப் ரோடர் ஸ்டைலில் காட்சியளிக்கின்றது. இதற்காக, எக்ஸ்-லைன் ட்ரயல் அட்டாக் கான்செப்ட் மாடலில் கஸ்டமைஸ் செய்யப்பட்ட 18 இன்ச் கொண்ட அலாய் பொருத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, கரடு முரடான சாலையில் பயணிப்பதற்கு ஏற்ப டயரும் இணைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, இந்த எஸ்யூவியை மேலும் ரக்கர்டாக காட்ட சிவப்பு நிற டோவிங் ஹூக்குடன் கூடிய பம்பர் நிறுவப்பட்டுள்ளது. இத்துடன், எட்டு ஆக்சிலரி மின் விளக்குகளும் காரில் பொருத்தப்பட்டுள்ளது. இதில், நான்கு முன் பக்க பம்பரிலும், நான்கு காரின் மேற்கூரையிலும் நிறவப்பட்டிருக்கின்றது.
தொடர்ந்து, இந்த காரின் ரூஃபில் மின் விளக்குகள் மட்டுமில்லாமல் லக்கேஜ்களை ஏற்றிச் செல்லும் கேரியரும் வழங்கப்பட்டுள்ளது.

மேற்கூரையில் பொருத்தப்பட்டிருக்கும் ஹெல்லா ஆக்சிலரி மின் விளக்குகள் அடர்ந்த பனியில் கூட தெளிவான பாதையை விளக்க உதவும் திறனைக் கொண்டது என கூறப்படுகின்றது.
கியா எக்ஸ்-லைன் அர்பன் கான்செப்ட் கார்களுக்கு அதிகளவு கிரவுண்ட் கிளியரன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இது கரடு-முரடான மற்றும் நீர் நிறைந்த சாலைகளில் தங்கு தடையின்றி செல்ல உதவும்.

இந்த காரை ஆஃப் ரோடராக மட்டுமின்றி ரேஸ் வாகனங்களைப் போன்று காண்பிப்பதற்காக ஆங்காங்கே கோல்டு, கிரே மற்றும் சிவப்பு நிற ஹைலைட்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
தற்போது காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் எக்ஸ்-லைன் ட்ரயல் அட்டாக் மற்றும் எக்ஸ்-லைன் அர்பன் ஆகிய இரு கான்செப்ட் கார்களிலும் 1.6லி சிலிண்ட் டர்போசார்ஜட் எஞ்ஜினே காணப்படுகின்றது. இவை 7 ஸ்பீடு ட்யூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸைக் கொண்டவை.

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 175 பிஎச்பி பவரையும், 264 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இவ்விரு கார்களும் எப்போது உற்பத்தி செய்யப்படும் மற்றும் இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. இது விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








