குட் நியூஸ்... கொரோனாவால் கியா சொனெட் எஸ்யூவி அறிமுகம் தள்ளிப்போகாது!
கொரோனா பிரச்னையால் கியா சொனெட் எஸ்யூவியின் அறிமுகத்தில் எந்த பிரச்னையும் ஏற்படாது என்ற மகிழ்ச்சி தரும் தகவல் வெளியாகி உள்ளது. கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

கடந்த ஆண்டு கியா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்த செல்டோஸ் எஸ்யூவி மிகப்பெரிய ஹிட் மாடலாக வலம் வருகிறது. இதனையடுத்து, அந்நிறுவனம் அறிமுகப்படுத்திய கார்னிவல் காருக்கும் பெரிய அளவிலான வரவற்பு கிடை்துள்ளது. இந்த நிலையில், அந்நிறுவனத்திடம் இருந்து ஒரு காம்பேக்ட் எஸ்யூவி வர இருப்பது இந்தியர்களை பெரும் ஆவலில் ஆழ்த்தி உள்ளது.

இது கியா செல்டோஸ் காரின் டிசைன் அம்சங்களுடன் மினி எஸ்யூவி போன்று இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன், செல்டோஸ் காரைவிட குறைவான விலை எஸ்யூவி தேர்வாகவும் அமையும் என்பது வாடிக்கையாளர்களிடம் ஆவலை அதிகரிக்க காரணமாக உள்ளது.
MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் கியா சொனெட் எஸ்யூவி காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. அது கான்செப்ட் மாடலாக தெரிவிக்கப்பட்டாலும், பெரும்பாலான டிசைன் அம்சங்கள் அப்படியே தயாரிப்பு நிலை மாடலில் தக்க வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனால், நிச்சயம் வாடிக்கையாளர் மத்தியில் பெரிய வரவேற்பை பெறும் வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஓரிரு மாதங்களில் இந்த எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், கொரோனா பாதிப்பு இந்த எஸ்யூவியின் வருகையில் தாமதத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், கொரோனா பிரச்னையால் கியா சொனெட் எஸ்யூவியின் அறிமுகத்தில் எந்த தாமதமும் ஏற்படாது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. ஆட்டோகார் இந்தியா தளத்திடம் பேசிய கியா மோட்டார் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு தலைவர் மனோகர் பட்,"திட்டமிட்டபடி புதிய காம்பேக்ட் எஸ்யூவி அறிமுகம் செய்யப்படும். தற்போதைய பிரச்னயால் எந்த மாறுதலும் செய்யப்படாது," என்று தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு முடிந்தவுடன் மீண்டும் விற்பனையில் வலுவான நிலையை எட்டும் நம்பிக்கை உள்ளதாகவும், பண்டிகை காலத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய காம்பேக்ட் எஸ்யூவியின் மூலமாக தங்களது வர்த்தகம் மேலும் வலுவடையும் என்றும் அவர் கூறி இருக்கிறார்.
MOST READ: அறிமுகத்திற்கு முன்னதாக இந்தியாவில் ஸ்கோடா கரோக் எஸ்யூவி சோதனை ஓட்டம்...

புதிய கியா சொனெட் எஸ்யூவி வாடிக்கையாளர்களை கவரும் வகையில் மிகச் சிறப்பான டிசைன் அம்சங்களுடன் வர இருக்கிறது. வலிமையான தோற்றம், எல்இடி லைட் பார், வித்தியாசமான அலாய் வீல்கள் போன்றவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

இந்த காரில் ஏராளமான வசதிகள் இடம்பெற்றிருக்கும். குறிப்பாக, 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட உள்ளது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும் என்பதுடன், யுவோ கனெக்டெட் கார் தொழில்நுட்பத்தின் மூலமாக ஏராளமான வசதிகளை பெற முடியும். போஸ் சவுண்ட் சிஸ்டம் இடம்பெற உள்ளது.

ஹூண்டாய் வெனியூ காரில் பயன்படுத்தப்படும் அதே எஞ்சின் தேர்வுகள் வழங்கப்பட உள்ளன. இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் கொடுக்கப்படும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் வர இருக்கிறது.

புதிய கியா சொனெட் எஸ்யூவி ரூ.7 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிகளுக்கு போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








