கொசுக்களைபோல் கொரோனா வைரஸை வேட்டையாடும் எந்திரம்.. இதை 1கிமீ இயக்க 50 பைசாவே போதும்..!
கொசுக்களை அழிக்கும் எந்திரத்தைப் போன்று கொரோனா வைரசை அழிப்பதற்கான எந்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை 1 கிமீ இயக்க வெறும் 50 பைசாவே போதும் என கூறப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

நாம் எதிர்பாராத மிக அதி-தீவிர வேகத்தில் கொரோனா வைரஸ் பரவி வருகின்றது. அதிலும், இதன் தொற்று சமீப காலமாக பல மடங்கு உயர்ந்த வண்ணம் இருக்கின்றது. குறிப்பாக, தமிழகத்தின் தலைநகரான சென்னையில் ஒவ்வொரு நாளும் நூற்றுக் கணக்கானோர் வைரஸ் தொற்றால் பாதித்து வருகின்றனர். இதே நிலையைதான் கொரோனா வைரஸ் உலக நாடுகள் பலவற்றிற்கு ஏற்படுத்தியுள்ளது.

எனவே, இந்த வைரசை மனிதர்களைவிட்டு மட்டுமல்ல உலகத்தையேவிட்டு விரட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில், வைரசை கொல்லுவதற்கான புது எந்திரங்கள் மற்றும் ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
சமீபத்தில்கூட மனிதர்கள் மீது படர்ந்திருக்கும் கிருமி தொற்றுகளை நீக்குகின்ற வகையிலான ரோபோக்களை ஹாங்காங் விமான நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது குறிப்பிடத்தகுந்தது.

இந்நிலையில், கொசுக்களை அழிக்கும் வாகனங்களைப் போன்றே வைரஸ் மற்றும் பாக்டீரியோ போன்ற நோய் தொற்றுகளை உருவாக்கும் கிருமிகளை அழிப்பதற்கான வாகனத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக பிரபல மின் வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.
ஆம், கைநடிக் நிறுவனம், அதன் மின்சார வாகனங்களின் வரிசையில் கிருமி நாசினி புகை மற்றும் மருந்து தெளிப்பான் வாகனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த வாகனங்களை வெளி மற்றும் உட்புறங்களை தூய்மைச் செய்யும் வகையில் வடிவமைத்திருப்பதாக அது தெரிவித்துள்ளது. அதாவது, நகரத்தின் தெருக்கள் மட்டுமின்றி தொழிற்சாலைகளின் உட்பகுதியையும் தூய்மைச் செய்கின்ற திறனில் அந்த கைநடிக் அதனை உருவாக்கியிருக்கின்றது.

இதற்காக மூன்று விதமான பிரத்யேக மின் வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன. அதாவது, கைநடிக் இ-ஃபாக்கர் (புகை தெளிப்பான்), இ-ஸ்பிரேயர் (மருந்து தெளிப்பான்) மற்றும் யுவி கதிர்வீச்சு கொண்ட எந்திரம் உள்ளிட்டவற்றை அது அறிமுகம் செய்துள்ளது.

இதில், இ-ஃபாக்கர் மற்றும் இ-ஸ்பிரேயர்கள் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதி, தொழிற்சாலை, மருத்துவமனையின் வெளிப்புறங்கள், சந்தைகள் உள்ளிட்ட பகுதிகளில் தூய்மைப் பணியை மேற்கொள்ளும்.

இதேபோன்று, யுவி சேனிட்டைசர் கருவிகள் பிரத்யேகமாக மருத்துவமனையின் உட்பகுதியில், குறிப்பாக அறை மற்றும் கழிவறைகள் உள்ளிட்டவற்றை தனிக் கவனம் கொண்டு இது சுத்தம் செய்யும்.
குறிப்பாக, கொரோனா நோய் தொற்றுடையவர்களைக் கயாளும் ஆம்புலன்ஸ்கள், பேருந்துகள் மற்றும் தனிப் பிரிவு பகுதிகளில் இந்த யுவி கதிர்வீச்சு எந்திரங்கள் கிருமிகளை அழிக்க உதவும்.

இதேபோன்று, கைநடிக் இ-ஃபாக்கிங் எந்திரத்தில் புகையை உருவாக்க டீசலுக்கு பதிலாக தண்ணீர் பயன்படுத்தப்பட உள்ளது. இது வெப்பம் கலந்த புகைக்கு பதிலாக, மூடு பனியை உருவாக்கும். இது காற்றில் மாசை ஏற்படுத்தாமல், தூய்மைப் பணியை மட்டும் மேற்கொள்ளும். இருப்பினும், இதன் பயன் டீசல் ஃபாக்கிங் கருவிகளைக் காட்டிலும் கூடுதலானதாக இருக்கும்.

இந்த எந்திரத்தைத் தாங்கிக் கொண்டு நகர் முழுவதும் வலம் வருவதற்காக மூன்று சக்கரங்கள் கொண்ட மின் வாகனங்கள் தயார் செய்யப்பட்டிருக்கின்றன. இது இ-ஃபாக்கரை மட்டுமின்றி மருந்து தெளிப்பான் பணியை மேற்கொள்ளவும் பயன்படுத்தப்படும்.
இந்த புதுமிக கிருமி நாசினி வாகனம் மின்சாரத்தால் இயங்குபவை என்ற காரணத்தால், அது சுற்றுப்புறத்திற்கு எந்தவொரு பின் விளைவையும் ஏற்படுத்தாது.

அதுமட்டுமின்றி, இதனை ஒரு கிமீட்டருக்கு இயக்க 50 பைசா மட்டுமே செலவாகும் என கைநடிக் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த வாகனம் குறைந்த வேகத்தில் இயங்கும் தன்மைக் கொண்டவை என்பதால் இதனை பராமரிக்கும் செலவும் மிக குறைந்ததாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








