இந்தியாவில் கார் உற்பத்தியை துவங்கியது லெக்சஸ் நிறுவனம்... விலை கணிசமாக குறைய வாய்ப்பு!
இந்தியாவில் கார் உற்பத்தியை லெக்சஸ் கார் நிறுவனம் துவங்கி இருக்கிறது. இதனால், லெக்சஸ் கார்களின் விலை கணிசமாக குறையும் வாய்ப்பு எழுந்துள்ளது.

ஜப்பானை சேர்ந்த டொயோட்டா கார் நிறுவனத்தின் அங்கமாக செயல்பட்டு வரும் லெக்சஸ் நிறுவனம் இந்தியாவில் வலுவான வர்த்தகத்தை நோக்கி செயல்பாடுகளை முன்னெடுத்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு இந்தியாவில் வர்த்தகத்தை துவங்கிய லெக்சஸ் நிறுவனம் இதுவரை குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சியை பெறவில்லை.

இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் தற்போது 1 அல்லது 2 சதவீத அளவிற்கு மட்டுமே பங்களிப்பை பெற்றிருக்கும் இந்நிறுவனம், இதனை வெகுவாக உயர்த்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது.

அதாவது, லெக்சஸ் சொகுசு கார்களுக்கு போதிய வரவேற்பு இல்லாததற்கு முக்கிய காரணம் கணிசமான விலை. அதாவது, அனைத்து கார்களையும் அந்நிறுவனம் இறக்குமதி செய்து விற்பனை செய்வதில், விலையை கணிசமாக நிர்ணயிக்க வேண்டிய சூழல் இருந்து வந்தது.

அதாவது, இறக்குமதி கார்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படுவதால், போட்டியாளர்களைவிட லெக்சஸ் கார்களின் விலை மிக அதிகமாக இருந்து வருகிறது. ஆனால், இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யும்போது விலை கணிசமாக குறையும்.

இந்த நிலையில், இந்தியாவிலேயே கார்களை அசெம்பிள் செய்து விற்பனை செய்ய லெக்சஸ் முடிவு செய்துள்ளது. அதன்படி, முதலாவதாக இஎஸ்300எச் செடான் காரை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யும் பணிகளை லெக்சஸ் துவங்கி இருக்கிறது.

பெங்களூர் அருகே பிடதியில் உள்ள டொயோட்டா கார் ஆலையிலேயே லெக்சஸ் கார்களுக்கான உற்பத்திப் பிரிவு துவங்கப்பட்டுள்ளது. இதற்காக 100 மில்லியன் டாலர்களை டொயோட்டா குழுமம் முதலீடு செய்துள்ளது.

லெக்சஸ் கார்களின் முக்கிய பாகங்களை இறக்குமதி செய்து இந்த ஆலையில் வைத்து அசெம்பிள் செய்து விற்பனை செய்வதற்கு டொயோட்டா குழுமம் திட்டமிட்டுள்ளது.

இஎஸ் சொகுசு செடான் காரை தொடர்ந்து என்எக்ஸ் சொகுசு எஸ்யூவி காரை இந்தியாவில் அசெம்பிள் செய்வதற்கு லெக்சஸ் திட்டமிட்டுள்ளது. இதனால், இஎஸ் மற்றும் என்எக்ஸ் கார்களின் விலை கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது, முக்கிய பாகங்களாக தருவிக்கும்போது வரி 70 சதவீதம் குறைவாக இருக்கும். இதன்மூலமாக, கார் அசெம்பிள் செய்து விற்பனை செய்யும்போது விலை 40 சதவீதம் வரை குறைய வாய்ப்பு ஏற்படும்.

மேலும், தற்போது டெல்லி, மும்பை, குர்கான் மற்றும் பெங்களூரில் மட்டுமே லெக்சஸ் நிறுவனத்தின் டீலர்கள் செயல்பட்டு வருகின்றன. விரைவில் சென்னை மற்றும் ஹைதராபாத் நகரங்களிலும் ஷோரூம்களை திறக்கவும் லெக்சஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








