பண்டிகை காலத்திலும் தடுமாறும் விற்பனை... சோகத்தில் சொகுசு கார் நிறுவனங்கள்...
இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதத்திலும், சொகுசு கார்களின் விற்பனை மிகவும் குறைவாகவே இருந்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து கார் நிறுவனங்கள் தற்போது மீண்டு வருகின்றன. மாருதி சுஸுகி மற்றும் டாடா போன்ற முன்னணி கார் நிறுவனங்கள், கடந்த அக்டோபர் மாதம் சிறப்பான விற்பனை எண்ணிக்கையையும், வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளன. கடந்த மார்ச் இறுதியில் ஊரடங்கு அமலுக்கு வந்த பின், ஏப்ரல், மே மாதங்களில் கார் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது.

அதன்பின் மாதந்தோறும் விற்பனை மெல்ல மெல்ல உயர்ந்து வந்த நிலையில், தற்போதைய பண்டிகை காலம் கார் நிறுவனங்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு பலர் புதிய கார்களை வாங்கி வருகின்றனர். கொரோனா வைரஸ் அச்சத்தால் மக்கள் பொது போக்குவரத்தை தவிர்த்து வருவதும், கார்களின் விற்பனை உயர்ந்து வருவதற்கு ஒரு காரணமாக உள்ளது.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

ஆனால் சொகுசு கார் நிறுவனங்கள் இன்னும் பாதிப்பில் இருந்து மீளவில்லை. கடந்த அக்டோபர் மாதமும் கிட்டத்தட்ட அனைத்து சொகுசு கார் நிறுவனங்களும் வீழ்ச்சியைதான் பதிவு செய்துள்ளன. கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்த சொகுசு கார் நிறுவனங்களின் பட்டியலில், மெர்சிடிஸ் பென்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் 841 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்தாண்டு அக்டோபரில் 1,185 ஆக இருந்தது. இது 29.03 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் பிஎம்டபிள்யூ நிறுவனம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த அக்டோபரில் பிஎம்டபிள்யூ நிறுவனம் 573 கார்களை விற்பனை செய்துள்ளது.

இந்த எண்ணிக்கை கடந்தாண்டு அக்டோபரில் 857 ஆக இருந்தது. இது 33.14 சதவீத வீழ்ச்சியாகும். மூன்றாவது இடத்தை ஆடி நிறுவனம் பிடித்துள்ளது. ஆடி நிறுவனம் கடந்த அக்டோபரில் 257 கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்தாண்டு அக்டோபரில் 326 ஆக இருந்தது. இது 21.17 சதவீத வீழ்ச்சியாகும்.

நான்காவது இடத்தை ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் பிடித்துள்ளது. இந்த நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் 151 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு அக்டோபரில் இந்த எண்ணிக்கை 351 ஆக இருந்தது. இது 56.98 சதவீத வீழ்ச்சியாகும். ஐந்தாவது இடத்தை வால்வோ பிடித்துள்ளது. வால்வோ நிறுவனம் கடந்த அக்டோபரில் 137 கார்களை விற்பனை செய்துள்ளது.

கடந்தாண்டு அக்டோபரில் இந்த எண்ணிக்கை 178 ஆக இருந்தது. இது 23.03 சதவீத வீழ்ச்சியாகும். ஆறாவது இடத்தை போர்ஷே பிடித்துள்ளது. போர்ஷே நிறுவனம் கடந்த அக்டோபரில் 19 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்தாண்டு அக்டோபரில் இந்த எண்ணிக்கை 31 ஆக இருந்தது. இது 38.71 சதவீத வீழ்ச்சியாகும்.

இதற்கு அடுத்தடுத்த இடங்களில் உள்ள லம்போர்கினி, ஃபெராரி மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்களும் தலா 1 கார்களை மட்டும் விற்பனை செய்துள்ளன. இதில், லம்போர்கினி நிறுவனம் கடந்தாண்டு அக்டோபரில் ஒரு காரை கூட விற்பனை செய்யவில்லை. அதே சமயம் ஃபெராரி நிறுவனம் 2 கார்களையும், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் 4 கார்களையும் விற்பனை செய்திருந்தன.

இதற்கிடையே பென்ட்லீ நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் 2 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதமும் இந்த நிறுவனம் 2 கார்களை மட்டும்தான் விற்பனை செய்திருந்தது. தற்போதை சந்தை சூழல், சொகுசு கார் நிறுவனங்களை மிக கடுமையாக பாதித்திருப்பதை இதன் மூலம் உணர முடிகிறது.


Click it and Unblock the Notifications








