சென்னை மற்றும் புத் ரேஸ் டிராக்குகள் விரைவில் திறக்கப்படுகிறது
கொரோனாவால் மூடப்பட்டு இருந்த சென்னை மற்றும் நொய்டா ஆகிய இடங்களில் உள்ள சர்வதேச தரத்திலான ரேஸ் டிராக்குகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.

கொரோனா பிரச்னையால் உலக அளவில் மோட்டார் பந்தயங்கள் கால வரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும் மோட்டார் பந்தயங்கள் முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக, சென்னையிலுள்ள மோட்டார் பந்தய களம் மற்றும் டெல்லி அருகே நொய்டாவில் உள்ள புத் இன்டர்நேஷனல் பந்தய களங்கள் மூடப்பட்டன.

கடந்த இரண்டரை மாதங்களாக பாதுகாப்பு கருதி, இந்த பந்தய களங்கள் மூடப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில், கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, வர்த்தக நடவடிக்களை துவங்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்கி வருகின்றன.

இதனையடுத்து, தற்போது நொய்டா மற்றும் சென்னை மோட்டார் பந்தய களங்கள் மீண்டும் திறக்கப்பட்டு பந்தயங்கள் நடைபெற இருக்கின்றன. புத் இன்டர்நேஷனல் சர்க்யூட் விரைவில் திறக்கப்பட உள்ளதாக சமூக வலைதளம் மூலமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதேபோன்று, பந்தய களம் மற்றும் கேலரி பகுதிகளில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்படும். சமூக இடைவெளி மற்றும் கிருமி நாசினி தெளிப்பு முறைகளுடன் மீண்டும் செயல்பட உள்ளன.

சென்னை மெட்ராஸ் மோட்டார் ரேஸ் டிராக்கிலும் மோட்டார் பந்தயங்கள் வரும் 14ந் தேதி முதல் துவங்கப்பட உள்ளன. வாகனங்களின் திறன் சோதனை, வாகன தயாரிப்பு நிறுவனங்கள் நடத்தும் பந்தயங்கள், தனிநபர் பயிற்சிக்காக அனுமதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஜூன் 14ந் தேதி காலை 9 மணிமுதல் மதியம் 1 மணிவரை இருசக்கர வாகனங்கள் பந்தய களத்தில் அனுமதிக்கப்பட உள்ளன. ஒரு வாகனத்தை ஓட்டி பார்ப்பதற்கு ரூ.1,500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 2 மணிமுதல் மாலை 6 மணிவரை கார்கள் அனுமதிக்கப்படும். ஒரு வாகனத்திற்கு ரூ.4,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டெல்லி புத் இன்டர்நேஷனல் சர்க்யூட் மற்றும் சென்னை மோட்டார் பந்தய களங்கள் மீண்டும் திறக்கப்பட உள்ளது மோட்டார் பந்தய வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உரிய வழிகாட்டுதல்களுடன் பந்தயங்கள் நடைபெறும் என்று பந்தய களங்களின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








