காவல்துறை அதிரடி.. பல கோடி ரூபாய் மதிப்புள்ள கார்கள் பறிமுதல்!! எதற்காக.. யாருடையது.. என தெரியுமா?
நாட்டின் முன்னணி தொழிலதிபர்களுடைய பல கோடி மதிப்புள்ள கார்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

உலக நாடுகள் அனைத்தையும் மண்டியிட செய்துள்ளது கண்களுக்கே புலப்படாத ஒற்றை வைரஸ். நாங்கள்தான் வல்லரசு நாடு., பொருளாதாரத்திலும், மருத்துவத்துறையிலும் தலை சிறந்தவர்கள் என அலட்டிக் கொண்டவர்களைக்கூட அது விட்டு வைக்கவில்லை. இவர்களும் இந்த வைரசிடம் போரிட முடியாமல் தோற்றுபோய் நிற்கின்றனர்.
மனித இனம் இதுவரை கண்டிராத புதுவகை வைரஸ் இதுவென்பதால் மாற்று மருந்து கண்டுபிடிப்பதில் சற்று தொய்வு ஏற்பட்டு வருகின்றது.
ARE YOU ON INSTAGRAM? FOLLOW TAMIL DRIVESPARK ON INSTAGRAM - CLICK HERE!

எனவே, இந்த வைரஸ் பரவாமல் இருக்க வேண்டும் என்பதற்காக உலக நாடுகள் பல தன் மக்களை வெளியில் நடமாட வேண்டாம் என அறிவுறுத்தி வருகின்றன. இதற்கான தடை உத்தரவு (லாக் டவுண்) போன்ற கசப்பான நடவடிக்கைகளை அவை எடுத்து வருகின்றன.
இந்தியாவும் உலக நாடுகள் சிலவற்றின் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு சில முன்னெச்சரிக்கை நடிவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

அந்தவகையில், முன்னதாக அறிவிக்கப்பட்ட தேசிய ஊரடங்கு உத்தரவு தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களின் வேண்டுகோள், மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் அறிவுரை மற்றும் உலக சுகாதாரத்துறையின் வலியுறுத்தல் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தேசிய ஊரடங்கு உத்தரவு மீண்டும் புதிக்கப்பட்டு இம்மாதம் இறுதி (30ம் தேதி) வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக தினக் கூலி தொழிலாளர்கள், அடித்தட்டு மக்கள் என பலர் மிகக் கடுமையான பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். மேலும், இதுவரை கண்டிராத வறுமைக்குள் அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பலர் மிகுந்த மன உலைச்சல் மற்றும் வேதனைக்கு ஆளாகியிருக்கின்றனர்.

ஆனால், இந்திய பணக்காரர்கள் பலர் இந்தியாவின் இம்மாதிரியான இக்கட்டான சூழ்நிலையிலும் ஜாலியான வாழ்க்கையையே வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர்
இதனை உறுதிச் செய்கின்ற வகையில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஓர் சம்பவம் அரங்கேறியிருக்கின்றது.

நம்மில் பலர் அறிந்த ஓர் நிறுவனம்தான் டிஎச்எஃப்எல். இந்நிறுவனத்தின் பங்குதாரர்கள் சிலரே அரசின் ஊரடங்கு உத்தரவை நீர்த்துபோகும் வகையில் செயல்பட்டிருக்கின்றனர். இதற்கான பலனையும் அவர்கள் அனுபவித்திருக்கின்றனர்.
டிஎச்எஃப்எல் நிறுவனத்தின் புரோமோட்டர்களாக கபில் வத்வான் மற்றும் தீரஜ் வத்வான் ஆகியோர் இருந்து வருகின்றனர். இவர்கள் மீது ஏற்கனவே அமலாக்கத்துறையில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. .

குறிப்பாக, யெஸ் வங்கி பண மோசடி வழக்கு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கின்றது. இதில் ஆஜராகும்படி பலமுறை இவர்களுக்கு அழைப்பு விடுத்தும் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளனர். இதனால், இவர்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் தேடி வந்ததாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில், வத்வான் சகோதரர்கள் மற்றும் 21 பேர் தேசிய ஊரடங்கு உத்தரவை மீறி மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மலைப் பகுதியான மஹபலீஸ்வர் பண்ணைவீட்டிற்கு சென்றிருக்கின்றனர்.
இதுகுறித்த தகவலறிந்த அமலாக்கத்துறை, வத்வான் சகோதரர்கள் பயன்படுத்திய காரை பறிமுதல் செய்யும்படி உத்தரவிட்டனர்.

குறிப்பாக, பண மோசடி வழக்கின்கீழ் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனடிப்படையில் பண்ணை வீட்டிற்கு விரைந்த போலீஸார் 2 லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஆடம்பர எஸ்யூவி கார்கள் மற்றும் 3 டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி கார்களையும் பறிமுதல் செய்தனர். இவையனைத்தும் யெஸ் வங்கி மோசடியின் அடிப்படையிலேயே பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

தொடர்ந்து, தேசிய ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக வத்வான் சகோதரர்கள் மற்றும் அவருடன் பயணித்த 21 பேர்கள் மீதும் போலீஸார் வழக்கு பதிந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆகையால், போலீஸார் வத்வான் சகோதரர்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்ய பண மோசடி மட்டுமின்றி தேசிய ஊரடங்கு உத்தரவை மீறியதும் ஓர் காரணம் என தெரிகின்றது.

வழக்கு பதிவிலும் போலீஸார் இதனையேக் குறிப்பிட்டுள்ளனர். இதுபோன்ற விதிமீறும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி மத்திய மற்றும் மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.
இதனடிப்படையில் செல்வம் கொழித்த வத்வான் சகோதரர்கள் மீது போலீஸார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது பறிமுதல் செய்யப்பட்ட கார்களில் சில ஜார்கண்ட் மாநில பதிவெண் மற்றும் மஹாராஷ்டிரா ரெஜிஸ்ட்ரேசனைக் கொண்டதாக இருக்கின்றது.

இதில், ஜார்கண்ட் மாநில பதிவெண்ணைக் கொண்டிருக்கும் கார்கள் வரி ஏய்ப்பு செய்வதற்காக அம்மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது. பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் கார்களின் ஒட்டுமொத்த ரூ. 4.5 கோடி ஆகும். இதில், ரேஞ்ச் ரோவர் லேண்ட் காரின் ஒன்றின் மதிப்பு மட்டுமே 1.5 கோடி ரூபாய் ஆகும். இதேபோன்று, பார்ச்சூனர் எஸ்யூவி கார் இந்தியாவில் ரூ. 40 லட்சம் என்ற விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது.
Image Courtesy: Hindustan Times


Click it and Unblock the Notifications








