டெஸ்லா நிறுவனத்தை இழுக்க தமிழகம், கர்நாடகா இடையே போட்டா போட்டி... இடையில் புகுந்த மஹாராஷ்டிரா!
டெஸ்லா எலெக்ட்ரிக் கார் நிறுவனம் இந்தியாவில் களமிறங்க உள்ளதை உறுதிப்படுத்திய நிலையில், அந்நிறுவனத்தின் முதலீட்டை கவர்வதற்கு மாநிலங்கள் இடையே போட்டா போட்டி நிலவுகிறது.

அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா கார் நிறுவனம் எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் சிறந்து விளங்குகிறது. பல தசாப்தங்களாக உள்ள சொகுசு கார் நிறுவனங்களே எலெக்ட்ரிக் கார்களை உருவாக்கும் பணிகளில் தடுமாறி வரும் நிலையில், அதிசிறந்த தொழில்நுட்பங்களுடன் கார்களை உருவாக்கி உலக அளவில் நன்மதிப்பை பெற்றிருக்கிறது.

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் மட்டுமின்றி, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் டெஸ்லா வர்த்தகத்தை வலுவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. மேலும், இந்தியாவிலும் கார் விற்பனையை நேரடியாக துவங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான வரிவிதிப்பு முறை திருப்திகரமாக இல்லை என்று டெஸ்லா கூறி வந்தது.

இந்த நிலையில், ஒருவழியாக வரும் 2021ம் ஆண்டு இந்தியாவில் தனது எலெக்ட்ரிக் கார்களை நேரடியாக விற்பனைக்கு கொண்டு வருவதற்கு டெஸ்லா முடிவு செய்துள்ளது. இதனை அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி எலான் மஸ்க் சமூக வலைதளம் மூலமாக உறுதிப்படுத்தி இருக்கிறார்.

இந்த சூழலில், டெஸ்லா கார் நிறுவனம் இந்தியாவில் களமிறங்குவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கும் நிலையில், அந்நிறுவனத்தின் முதலீட்டை கவர்ந்து இழுப்பதற்காக மாநிலங்கள் இடையே போட்டா போட்டி நிலவுகிறது.

தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு டெஸ்லா நிறுவனத்திற்கு தமிழக அரசு அழைப்பு விடுத்தது. இதைத்தொடர்ந்து, டெஸ்லா நிறுவனத்துடன் கர்நாடக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கடந்த மாதம் தகவல் வெளியானது. டெஸ்லா நிறுவனத்தின் கார் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் பெங்களூரில் அமைப்பதற்காக இந்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தங்கள் மாநிலத்தில் முதலீடு செய்ய வருமாறு டெஸ்லா நிறுவனத்திற்கு மஹாராஷ்டிர அரசும் பேச்சுவார்த்தை நடத்தி வருவது தெரிய வந்துள்ளது. அம்மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் ஆதித்ய தாக்கரே ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், மஹாராஷ்டிராவில் முதலீடு செய்ய வருமாறு டெஸ்லா நிறுவனத்தின் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்க சிறந்த திட்டங்களை வகுத்து செயல்படுத்துவதிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
டெஸ்லா நிறுவனத்தை இழுத்தால் அது மாநிலத்தின் முதலீடு, வேலைவாய்ப்புகளை அதிகரிக்க செய்யும் முக்கிய விஷயமாக அமைவதுடன், டெஸ்லாவின் பெயர் இந்தியர்கள் மத்தியில் ஏற்கனவே பரீட்சயமாகி இருப்பதால், அரசியல் ரீதியில் மக்களிடையே தங்களது செல்வாக்கை எளிதாக அதிகரிக்க செய்யும் வாய்ப்பாகவும் அரசியல் தலைவர்கள் கருதுகின்றனர்.


Click it and Unblock the Notifications








