சட்ட விரோத சிவப்பு சுழல் விளக்கை பயன்படுத்திய உயர் அதிகாரி! யாருனு தெரிஞ்சா நிச்சயம் கோவப்படுவீங்க!
முதல்வர்களுக்கே இல்லாத ஓர் வசதியை முக்கிய அதிகாரி ஒருவர் பயன்படுத்தி சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

இந்தியாவில் அவசர வாகனங்களைத் தவிர வேறு எந்த வாகனங்களிலும் சைரன் மற்றும் ஃபிளாஷர் போன்ற மின் விளக்குகளை (சிவப்பு சுழல் விளக்குகள்) பயன்படுத்தக்கூடாது என மத்திய அரசு தடை விதித்தது. இந்த தடையானது கடந்த 2017ம் ஆண்டின் மத்தியில் இருந்து செயல்பாட்டில் இருந்து வருகின்றது.

குறிப்பாக, ஆம்புலன்ஸ், தீயணைப்பு மற்றும் காவல்துறை போன்ற அவசர வாகனங்களில் மட்டுமே இந்த சைரன் மற்றும் பெக்கான் போன்ற அவசர கால சமிக்ஞை கருவிகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற வழிகாட்டுதலையும் அது வெளியிட்டது.

இருப்பினும், ஒரு சிலர் மட்டும் சட்ட விரோதமாக அவற்றைப் பயன்படுத்தி வருகின்றனர். அதிலும், அரசின் உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகளே இந்த விதிமீறலை அதிகம் செய்து வருகின்றனர். அந்தவகையில், பீகன் மின் விளக்கை தனது சொந்த காரில் பயன்படுத்தி, துணை கலெக்டர் ஒருவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

பிடிபட்ட காரின் படம்
மஹாராஷ்டிரா மாநிலம், ஹிங்கோலி எனும் பகுதியில்தான் இந்த சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. தற்போது கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு நீடித்து வருகின்றது. இதன்காரணமாக போலீஸார் ஆங்காங்கே தடுப்புகளை அமைத்து வைரஸ் பரவாமல் தடுக்கும் விதமாக சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையிலான வாகன தணிக்கையில் மேற்கொண்டிருந்தபோதே சிவப்பு பெக்கான் பொருத்திய மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரொன்று ஹிங்கோலி காவல் நிலைய அதிகாரிகள் பணியில் ஈடுபட்டிருந்த பகுதியை நோக்கி வந்துள்ளது. அப்போது, அக்காரை ஆய்வு செய்யும் விதமாக எஸ்ஐ சாய்நாத் அன்மோத், மடக்கியுள்ளார்.

காரில் இருந்து மிகவும் சாதாரணமாக டி-சர்ட் மற்றும் அரை டிரவுசர் அணிந்தவாறு ஓர் நபர் இறங்கியுள்ளார். இவர், ஹிங்கோலி பகுதியின் துணை கலெக்டர் சந்திரகாந்த் சூர்யவன்ஷி என கூறப்படுகின்றது. இருப்பினும், காரில் சிவப்பு சுழல் விளக்குகளைப் பொருத்துவது சட்டப்படி குற்றம் என துணை கலெக்டருக்கு துணை ஆய்வாளர் சாய்நாத் எடுத்துரைத்துள்ளார்.

அப்போது, "எனக்கே சட்டம் சொல்லி தருகிறாயா" என வாக்குவாதத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளார் துணை கலெக்டர். இதையடுத்து இந்த பிரச்னை காவல்நிலையம் வரைச் சென்றுள்ளது.
அப்போது, உயர் அதிகாரிகள் முன்னிலையில் வைத்தே துணை ஆய்வாளரை, விதிமீறலில் ஈடுபட்ட துணை கலெக்டர் மிகக் கடுமையாக திட்டி தீர்த்துவிட்டு, அச்சுறுத்தல் செய்துவிட்டு சென்றதாகக் கூறப்படுகின்றது.

மேலும், அவர் எந்தவொரு அபராதமமும் செலுத்தவுமில்லை என தெரிகின்றது. இதனால் கடும் மன உலைச்சளுக்கு ஆளான எஸ்ஐ சாய்நாத், இச்சம்பவம்குறித்து மஹாராஷ்டிராவின் உயர் காவல்துறை அதிகாரிகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், "சட்ட விரோதமாக பயன்படுத்தப்பட்ட சிவப்பு சுழல் விளக்கை அகற்றக் கோரியதற்காக ஹிங்கோலி துணை கலெக்டர், தன்னை உயர் அதிகாரிகள் முன்னிலையில் அவமானப்படுத்தி அச்சுறுத்தியதாகவும், விதிமீறலுக்கு அபராதம் ஏதும் செலுத்தவும் இல்லை. இந்த விவகாரத்தில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்ற கோரிக்கையை அதில் கூறியிருந்தார்.

இதுகுறித்த காவல் துணை ஆய்வாளர் சாய்நாத் அன்மோத் கூறியதாவது, ஜூன் 3 அன்று நான் காலை 11.50 மணிக்கு ஹிங்கோலி, இந்திரா சவுக் பகுதியில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். அப்போது, சிவப்பு பெக்கனைப் பயன்படுத்தி MH-24-AS-7223 எண்ணைக் கொண்ட ஒரு தனியார் வாகனம் வந்தது. அதை நான் நிறுத்தினேன். வாகனத்தில் இருந்த நபர் ஷார்ட்ஸ் அணிந்திருந்தார். அவருக்கு, ஒரு தனியார் வாகனத்தில் பெக்கான் பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்று நான் அவரிடம் சொன்னேன்.

அப்போது, நான் ஒரு துணை கலெக்டர் என்றும் எனக்கு சட்டம் கற்பிக்க வேண்டாம் என்றும் அந்த நபர் என்னிடம் கூறினார். நான் ஒரு புகாரை பதிவு செய்து அவரது காரை கைப்பற்றுவேன் என்று சொன்னேன். தொடர்ந்து, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றேன். அங்கு ஒரு மூத்த அதிகாரியின் முன்னிலையிலேயே வைத்து என்னை அச்சுறுத்தி துஷ்பிரயோகம் செய்தார். எந்த அபராதமும் இல்லாமல் காரை எடுத்துச் செல்ல அனுமதிக்குமாறு மூத்த அதிகாரிகள் என்னிடம் கூறினார்கள். இதனால் நான் கடமையை தவறியவனாக மாறினேன்" என தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, அம்மாநிலம் முழுவதும் உள்ள இரண்டு லட்சத்திற்கும் அதிகமான துணை காவல் ஆய்வாளர்கள் தங்களின் ஆதரவை சாய்நாத் அன்மோத்திற்கு வழங்க ஆரம்பித்துள்ளனர். எனவே, தற்போது இந்த விவகாரம் மஹாராஷ்டிராவில் காட்டுத் தீயாய் வைரலாகத் தொடங்கியுள்ளது.

மத்திய அரசு சிவப்பு சுழல் மின் விளக்குகளைப் பயன்படுத்தக்கூடாது என அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து, மாநில முதல்வர்கள் முதல் பல முக்கிய அரசு அதிகாரிகள் தாங்களாகவே முன்வந்து தங்களின் கார்கள் மீது பொருத்தப்பட்டிருந்த சிவப்பு சுழல் மின் விளக்குகளை அகற்றினர்.

தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிகூட அவராகவே முன் வந்து சிவுப்பு சுழல் மின் விளக்கை அகற்றினார். இவ்வாறு, பலர் வழக்கமான போக்குவரத்திற்கு மாறிவிட்ட வேலையில், ஹிங்கோலி துணை கலெக்டரின் அடாவடி செயல் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தவறை உணராமல் நடவடிக்கை எடுத்த காவலர் மீதே தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்திருப்பது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








