குவாட்ரி சைக்கிள் ரகத்தில் மஹிந்திரா மின்சார கார்... அதிரடியான மாடலின் டீசர் வெளியீடு!
மஹிந்திரா நிறுவனம் குவாட்ரி சைக்கிள் மாடலில் மின்சார காரை அறிமுகம் செய்ய இருக்கின்றதைத்தொடர்ந்து, அதன் டீசரை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்திய மின்சார வாகன சந்தை தற்போதே சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. ஆனால், மக்கள் மத்தியில் இன்னும் அது அதிகளவில் பயன்பாட்டிற்கு வரவில்லை. இந்த இடைவெளிக்கு மின் வாகனங்களின் உச்சபட்ச விலையும், சார்ஜிங் நிலையங்கள் போன்ற கட்டமைப்பு வசதிகளின் குறைபாடே முக்கிய காரணமாக இருக்கின்றது.

ஆகையால், அரசு தரப்பில் மட்டுமின்றி வாகன உற்பத்தி நிறுவனங்கள் சார்பாகவும் மின்சார வாகனங்களுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், நாடு முழுவதிலும் உள்ள முக்கிய நகரங்களை முதலில் கவர்கின்ற வகையில் மின்சார வாகனங்களுக்கு தேவையான சகல வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முக்கியமாக சார்ஜிங் நிலையங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், மின்வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை அமைத்தால் மட்டுமே மக்களை கவர்ந்துவிட என்பதை உணர்ந்த சில வாகன உற்பத்தி நிறுவனங்கள் மலிவு விலை மற்றும் அனைவரும் பயனடைகின்ற வகையிலான மின்சார வாகனங்களை அறிமுகம் செய்வதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகின்றன.

அந்தவகையில், நாட்டின் முன்னணி வாகன உற்பத்தியாளர் நிறுவனமான மஹிந்திரா, குவாட்ரி சைக்கிள் ரகத்திலான மின்சார காரை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருக்கின்றது.

குவாட்ரி சைக்கிள் என்பது கார் மற்றும் ஆட்டோரிக்ஷாவிற்கும் இடையில் காணப்படும் இனம் ஆகும். இந்த வகையிலான வாகனத்தில் ஆட்டோக்களில் காணப்படுவதைப் போன்று எஞ்ஜின் பின்பகுதியில் நிறுவப்பட்டிருக்கும்.
இதனாலயே இந்த வகை வாகனங்களை குவாட்ரி சைக்கிள் என குறிப்பிடப்படுகின்றது.

மஹிந்திரா தற்போது டீசர் வெளியிட்டிருக்கும் மின்சார வாகனமும் இந்த இன வாகனம்தான். ஏற்கனவே, இந்த குவாட்ரி சைக்கிளை மஹிந்திரா நிறுவனம் அவ்வப்போது சோதனையோட்டம் செய்து வருகின்றது. அவ்வாறு, அண்மையில் சென்னையில் வைத்து இந்த மின்சார குவாட்ரி சைக்கிளை சோதனையோட்டம் செய்தபோது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வைரலாகின.

இதைத்தொடர்ந்து, தற்போது இந்த குவாட்ரி சைக்கிள் கார்குறித்த டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி 2020ம் ஆண்டின் மூன்றாம் நிதியாண்டிற்குள் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வாகனத்தை கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில்தான் மஹிந்திரா முதல் முறையாக காட்சிப்படுத்தியது.

தற்போது வெளியாகியிருக்கும் டீசர் வீடியோவில் இந்த வாகனம் முழுமையாக காட்சிப்படுத்தவில்லை. அதேசமயம், இந்த வாகனத்திற்கு அடாம் என பெயரிடப்பட்டிருப்பது மட்டும் உறுதியாகியுள்ளது.
இந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்...
இதையடுத்து, தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி இந்த அடாம் குவாட்ரி சைக்கிள் மின்சார வாகனம் இரு கதவுகளைக் கொண்ட நான்கு சக்கர வாகனம் என கூறப்படுகின்றது. இது, மஹிந்திரா நிறுவனம் முன்னதாக விற்பனைச் செய்துவந்த இ2ஓ மாடலுக்கு இணையானது என கூறப்படுகின்றது.
இந்த கார் அண்மையில் அறிமுகமான புதிய பாதுகாப்பு விதிகளின் காரணமாக சந்தையில் இருந்து விளக்கப்பட்டது.

ஆகையால், இந்த அடாம் எலெக்ட்ரிக் மினி கார் கணிசமான பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டு களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக எடை, வெளியேற்றம் மற்றும் திறன் வெளிப்பாடு உள்ளிட்டவற்றில் இ2ஓ-வைக் காட்டிலும் சிறந்த மாடலாக இது செயல்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த மின்சார வாகனத்தை பெங்களூருவில் உள்ள உற்பத்தி ஆலையில் வைத்து தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்காக, மஹிந்திரா நிறுவனம் ரூ. 150 கோடி முதல் ரூ. 250 கோடி வரை முதலீடு செய்திருக்கின்றது. தொடர்ந்து, இந்திய மின்சார வாகனங்களுக்கான விதிகளின்படி, அடாம் மின்சார காரில் 15kW (20பிஎச்பி) எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 70 கிமீ இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.
இது இந்தியாவில் பஜாஜ் நிறுவனத்தின் க்யூட் எலெக்ட்ரிக் குவாட்ரி சைக்கிளுக்கு போட்டியாக அமைய இருக்கின்று.

மஹிந்திரா நிறுவனத்தைப் போலவே பஜாஜ் நிறுவனம் இருசக்கர வாகனங்களுடன் சேர்த்து குவாட்ரி சைக்கிள் மாடலிலான க்யூட் மின்சார வாகனத்தை அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த வாகனத்தின் அறிமுகமும் விரைவில் செய்யப்பட உள்ளது.

இதுமட்டுமின்றி, மேலும் பல வாகன உற்பத்தி நிறுவனங்கள் இந்தியர்களை தங்களின் மின்வாகனம் பக்கம் ஈர்க்கும் விதமாக அதிக ரேஞ்ச் மற்றும் குறைந்த விலை மின்சார வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளன.
குறிப்பு: சில புகைப்படங்கள் உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை...


Click it and Unblock the Notifications








