சகதியில் சிக்கிய மஹிந்திரா கார்... பாதுகாப்பாக மீட்ட ஆறு சக்கரங்கள் கொண்ட பொலிரோ... அசத்தல் வீடியோ!
சகதியில் சிக்கிய காரை ஆறு சக்கரங்கள் கொண்ட மஹிந்திரா பொலிரோ கார் மீட்டெடுப்பது போன்ற வீடியோக் காட்சி வளியாகியுள்ளது.

ஆஃப்-ரோடு பயண பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான வாகனங்களில் ஒன்றே மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ கார். இந்த காரை மிக எளிதில் மாடிஃபை செய்ய முடியும் என்பதே இதற்கு மிக முக்கிய காரணமாக உள்ளது. இதுமட்டுமின்றி, அனைத்து விதமான பாதைகளையும் மிக சுலபமாக சமாளிக்கும் திறன் இக்காருக்கு இருக்கின்றது. எனவேதான், ஆஃப்-ரோடு பயணத்திற்கு உகந்த வாகனமாக உள்ளது.

அந்தவகையில் தனது உருவத்தை மாற்றிக் கொண்ட மஹிந்திரா பொலிரோ காரே, சகதியில் சிக்கிய மஹிந்திரா ஜீப்பினை மீட்டெடுக்க உதவியிருக்கின்றது. கொரோனா வைரசால் நிலவி வந்த பொதுமுடுக்கத்தில் இருந்து மீண்ட மக்கள் தற்போதே இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர். இந்த வைரசின் தாக்கம் தற்போதும் நீடித்துக் கொண்டிருந்தாலும், குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு மக்கள் வெளியே ஆரம்பித்துள்ளனர்.

இதேபோன்று, வெகு நாட்களாக வீட்டுக்குள்ளேயே முடங்கியிருந்த பலரும் தங்களைப் புத்துணர்ச்சிப்படுத்திக் கொள்ள ஆயத்தமாகியுள்ளனர். அந்தவகையிலேயே நண்பர்கள் சிலர் ஆஃப்ரோடு பயணத்தை மேற்கொள்ளும் விதமாக இரண்டுக்கும் மேற்பட்ட கார்களில் சகதி நிறைந்த காட்டு வழி பயணத்தை மேற்கொண்டனர்.

அப்போதே ஜீப் வடிவத்திலான மஹிந்திரா மேஜர் கார் சகதியில் சிக்கியது. இதற்கு உதவி கரம் நீட்டும் விதமாக ஆறு சக்கரங்களுடன் அசுரனைப் போன்று உருமாறியிருக்கும் மஹிந்திரா பொலிரோ கார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோவை ஒய்யுவிளாக்ஸ் எனும் யுட்யூப் சேனல் வெளியிட்டிருக்கின்றது.

இந்த வீடியோவில் மஹிந்திரா பொலிரோ மற்றும் மேஜர் கார்கள் மட்டுமின்றி மாருதி ஜிப்ஸி காரும் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவருகின்றது. அதேசமயம், அனைத்து கார்களும் ஆரம்பத்தில் எந்தவொரு சிக்கிலுமின்றி பாதுகாப்பாக பயணிப்பதையும் நம்மால் வீடியோவாயிலாக காண முடிகின்றது. ஆனால், சில மீட்டர்கள் கார்கள் சென்ற பின்னர் இந்த நிலை அப்படியே மாறிவிடுகின்றது.

ஆம், அதிகம் சகதி நிறைந்த இடத்தில் மஹிந்திரா கார் சிக்கியது. அதன் டயர்களுக்கு போதுமான கிரிப் கிடைக்காத காரணத்தால், அக்காரால் முன்னேற முடியாமல் திணறியது. இந்த நிலையிலேயே மஹிந்திரா 6X4 கார் அது வெளியேற உதவியிருக்கின்றது. அடுத்தடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியுற்றதை அடுத்தே மஹிந்திரா பொலிரோ மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

அக்கார் ஒரு முயற்சியில் சகதியில் சிக்கியி மஹிந்திரா மேஜர் காரை மீட்டெடுத்தது. இந்த அதீத திறனுக்கு காரின் மிகவும் கிரிப்பான டயர்கள் மற்றும் 6X4 சிஸ்டமும் ஓர் காரணமாகும். அதேசமயம், மஹிந்திரா மேஜர் காரின் டயர்கள் அதிக தேய்மானத்தைச் சந்தித்திருப்பதை நம்மால் காண முடிகின்றது. இதுவே அக்கார் முன்னேற முடியாமல் திணருவதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றது.

ஆனால், மஹிந்திரா பொலிரோ அப்படியில்லாமல் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்துள்ளது. ஆஃப்ரோடு பயணத்திற்கு என்றே கூடுதல் பல அம்சங்களை அது பெற்றிருக்கின்றது. குறிப்பாக, கூடுதலாக ஓர் அச்சு இடம்பெற்றிருக்கின்றது. பொதுவாக மஹிந்திரா பொலிரோ இரு அச்சுகளுடன்தான் காணப்படும். ஆனால், இதில் அதிக திறன் வெளிப்பாட்டிற்காக கூடுதலாக ஓர் அச்சு சேர்க்கப்பட்டிருக்கின்றது.
இதனால், இக்காரில் ஆறு சக்கரங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இதுமட்டுமின்றி இக்காருக்கான எஞ்ஜினும் மாற்றப்பட்டுள்ளது. இது ஸ்கார்பியோ காரில் பெறப்பட்ட 2.6 லிட்டர் டர்போ டீசல் எஞ்ஜின் ஆகும். இதேபோன்று, மாருதி சுசுகி ஜிப்ஸி காரில் இருந்தும் சில தொழில்நுட்ப கருவிகள் பெறப்பட்டு, பொருத்தப்பட்டிருக்கின்றன.

இதனால்தான் அக்கார் அசுரனைப் போன்று தற்போது காட்சியளிக்கின்றது. இந்த ஒட்டுமொத்த மாற்றத்திற்கும் ரூ. 5.5 லட்சம் செலவாகியிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த செலவு மிகப்பெரியதாக தோன்றினாலும், அதில் சேர்க்கப்பட்டிருக்கும் புதிய தொழில்நுட்பங்கள் அதற்கு இணையானதாக உள்ளது.


Click it and Unblock the Notifications








