கொரோனா பரவும் அச்சம் இல்லாமல் மஹிந்திரா காரை சர்வீஸ் செய்ய புதிய வசதி!
கொரோனா பரவும் அச்சமில்லாமல், மஹிந்திரா கார்களை சர்வீஸ் செய்வதற்கான புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டாலும், கொரோனா பரவும் அச்சம் மக்களை வாட்டி வதைக்கிறது. அது எங்கு, எப்போது வரும் என்று தெரியாத சூழலில், அனைத்தையும் மிகவும் கவனமுடன் கையாள வேண்டிய கட்டாயத்தில் மக்கள் இருக்கின்றனர். இந்த நிலையில், வர்த்தக ஸ்தாபனங்கள் செயல்பாடுகளை துவக்கினாலும், ஊரடங்கு அமலில் இருப்பதுடன், கொரோனா பரவும் அச்சம் தொடர்ந்து மக்களை முடங்க செய்துள்ளது.

இந்த சூழலை மனதில் வைத்து மஹிந்திரா நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் கார்களை சர்வீஸ் செய்து கொள்வதற்கு புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதாவது, கொரோனா பரவும் அச்சம் இல்லாமல் காரை சர்வீஸ் செய்வதற்கான வாய்ப்பை இந்த சர்வீஸ் திட்டம் வழங்கும்.

இதற்காக, 'With You Hamesha' என்ற மொபைல் அப்ளிகேஷனை மஹிந்திரா வெளியிட்டுள்ளது. இந்த மொபைல் அப்ளிகேஷனில் காரை சர்வீஸ் செய்வதற்கு புக்கிங் செய்து கொள்ளலாம். மேலும், காரை பிக்கப், டிராப் செய்வதற்கான வசதியையும் இந்த மொபைல் செயலியில் குறிப்பிட்டு பெறலாம்.

மஹிந்திரா சர்வீஸ் மையத்தின் பணியாளர் உரிய பாதுகாப்பு வழிகாட்டு முறைகளை பின்பற்றி, வாடிக்கையாளரின் வீட்டிலேயே வந்து காரை பிக்கப் செய்து, சர்வீஸ் முடிந்தவுடன் கொண்டு வந்து டெலிவிரி கொடுத்து விடுவார்.

அதேபோன்று, மஹிந்திரா சர்வீஸ் மையத்தின் சூப்பர்வைசருடன் வீடியோ கால் மூலமாக பேசி, பிரச்னைகளை தெரிவிப்பதற்கான வசதியும் உள்ளது. இதன்மூலமாக, கார் சர்வீஸ் மையத்தில் பராமரிப்பு அல்லது பழுது நீக்கும் பணிகள் குறித்த வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்தபடியே பார்ப்பதற்கான வாய்ப்பும் முதல்முறையாக வழங்கப்படுகிறது.

சர்வீஸ் செய்ததற்கான ஆவணங்கள், மாற்றப்பட்ட பாகங்கள் குறித்த தகவல்களை இந்த மொபைல் செயலியில் பார்க்க முடியும். அத்துடன், வீடியோ காலில் என்னென்ன சர்வீஸ் செய்யப்பட்டுள்ளது என்பதை மஹிந்திரா சர்வீஸ் மைய சூப்பர்வைசர் வாடிக்கையாளரிடம் விளக்குவதற்கான வாய்ப்பும் உள்ளது.

இந்த மொபைல் செயலி மூலமாக சர்வீஸ் செய்ததற்கான கட்டணத்தையும் செலுத்த முடியும். இதனால், எந்த இடத்திலும் வாடிக்கையாளர் கொரோனா பரவும் அச்சம் இல்லாமல், இருந்த இடத்தில் இருந்தே தங்களது மஹிந்திரா காரை சர்வீஸ் செய்து கொள்ள முடியும். இந்த திட்டம் வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் சிறப்பானதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கும்.

இந்த புதிய சர்வீஸ் திட்டம் குறித்து மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் பிரிவு தலைமை செயல் அதிகாரி வீஜே நக்ரா கூறுகையில்,"இந்த தனித்துவமான சர்வீஸ் திட்டம் எங்களது வாடிக்கையாளர்களுக்கு பெரிதும் பயன் தரும்.

இந்த இக்கட்டனா தருணத்தில், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், எந்த சிரமமும் இல்லாமல் சர்வீஸ் செய்வதற்கான வாய்ப்பை இந்த திட்டம் வழங்கும். உரிய நேரத்தில் வாடிக்கையாளர்கள் காரை சர்வீஸ் செய்து கொள்ள இந்த திட்டம் சிறப்பானதாக இருக்கும். இந்த திட்டத்தை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ள அழைக்கிறோம்," என்று கூறி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications








