1 லட்சம் முக கவசங்களை தயாரித்து வழங்கியது மஹிந்திரா
கொரோனா தடுப்பு போரில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்களுக்கு 1 லட்சம் முக கவசங்களை தயாரித்து கொடுத்து அசத்தி இருக்கிறது மஹிந்திரா நிறுவனம்.

கொரோனா பரவும் வேகம் இந்தியாவில் மெல்ல அதிகரித்து வருகிறது. தென் மாநிலங்களில் வேகம் குறைவாக தெரிந்தாலும், வட மாநிலங்களில் தற்போது தனது கொடூரத்தை காட்டத் துவங்கி இருக்கிறது. இதனால், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மருத்துவமனைகளில் எகிறி வருகிறது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் இவ்வேளையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் நேரடியாக தொடர்பில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது.
தங்களது உயிரையும் பொருட்படுத்தாது, கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு நேருக்கு நேர் சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில், மருத்துவர்கள், செவிலியர்கள் நலன் காக்க வேண்டிய அதிக அளவில் முக கவசங்கள் தேவைப்படுகின்றன.
ஒரே நேரத்தில் லட்சக்கணக்கில் தேவை ஏற்பட்டுள்ளதால், முக கவசங்கள் தயாரிப்புப் பணியில் கார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், மஹிந்திரா நிறுவனம் மருத்துவ உபகரணங்கள் மற்றும் முக கவசங்கள் தயாரிப்பு பணியில் இறங்கி இருக்கிறது.
அதன்படி, மருத்துவப் பணியாளர்களுக்கு தேவையான 1 லட்சம் முக கவசங்களை தயாரித்து சப்ளை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மஹிந்திரா வாகன நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவு தலைவர் விஜய் கல்ரா ட்விட்டரில் பெருமிதத்துடன் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், இதுவரை 1 லட்சம் முக கவசங்கள் மற்றும் 3 ப்ளை மாஸ்க்குகளை தயாரித்து டெலிவிரி கொடுத்துள்ளோம்.
ஒரு பெரிய நல்ல காரியத்திற்காக இந்த பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள் மற்றும் பணியாளர்களை நன்றி பாராட்டுகிறோம். எங்களது சப்ளையர் மற்றும் 8 ஆலைகளில் உற்பத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணி தொடரும் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








