மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 கார்கள் டீலர்களுக்கு அனுப்பும் பணி துவக்கம் ... விரைவில் டெலிவிரி!
மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 எஸ்யூவி கார்கள் டீலர்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விரைவில் டெலிவிரி கொடுக்கும் பணிகளும் துவங்கப்பட உள்ளன. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கடந்த மாதம் 1ந் தேதி முதல் பிஎஸ்6 கார்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் விதி அமலுக்கு வந்துள்ளது. இதனையடுத்து, பிஎஸ்6 கார்களை சந்தைக்கு கொண்டு வரும் பணிகளில் வாகன நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன.

எனினும், கொரோனா பிரச்னையால் பிஎஸ்6 கார்களை கொண்டு வருவதில் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் பிஎஸ்6 கார்கள் டீலர்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாக டீம் பிஎச்பி தள செய்தி தெரிவிக்கிறது.
MOST READ: பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

அதாவது, கொரோனா ஊரடங்கு அமலுக்கு வருவதற்கு முன்பு கடந்த மார்ச் மாதத்தில் இந்த மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 கார்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. ஆனால், போக்குவரத்து முடங்கியதுடன், டீலர்களும் மூடப்பட்டுள்ள நிலையில், அனுப்புவதில் பிரச்னை இருந்தது.

இந்த நிலையில், ஊரடங்கு தளர்த்தப்பட்டு டீலர்கள் திறக்கப்பட்டுள்ளதால், பிஎஸ்6 கார்களை அனுப்பும் முயற்சிகளில் மஹிந்திரா ஈடுபட்டுள்ளது. மேலும், முதல் லாட்டில் ஒவ்வொரு டீலருக்கும் 55 மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 கார்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அனுப்பப்பட்டு வருகிறதாம்.

இந்த கார்கள் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத துவக்கத்தில் டீலர்களுக்கு சென்றடைந்துவிடும். அதன்பிறகு டெலிவிரிப் பணிகள் துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் லாட்டில் அனுப்பப்பட்டுள்ள கார்களில் 47 சதவீதம் மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் W11(O) என்ற விலை உயர்ந்த வேரியண்ட் என்றும், மீதமுள்ளவற்றில் 34 சதவீதம் W9, W7 வேரியண்ட்டுகளாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 சதவீதம் மட்டுமே W5 பேஸ் வேரியண்ட்டாக இருக்கும்.

அதேபோன்று, அனுப்பப்பட்டு வரும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 கார்களில் 85 சதவீதம் வெள்ளை வண்ணம் கொண்டதாகவும், 11 சதவீதம் கருப்பு வண்ணம் கொண்டதாகவும், 4 சதவீதம் சில்வர் வண்ணம் கொண்டதாகவும் இருப்பதாக அந்த செய்தி கூறுகிறது.

இதனிடையே, உதிரிபாக சப்ளை பிரச்னையால் மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 மாடலின் உற்பத்திப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாத துவக்கத்தில் உற்பத்தி மீண்டும் சீரடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் மாத துவக்கத்தில் உற்பத்தி செய்யப்படும் கார்கள் மாத இறுதியில் டீலர்களை சென்றடையும்.

மேலும், உதிரிபாகங்கள் சப்ளை பிரச்னையால் மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 மாடலின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வருகை தள்ளிப்போயுள்ளதாக தெரிகிறது. எனவே, தற்போது மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு மட்டுமே டெலிவிரி கொடுக்கப்பட உள்ளதாம்.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 மாடலில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 153 பிஎச்பி பவரையும், 360 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 மாடலுக்கு ரூ.13.20 லட்சம் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








