ஆவலுக்கு முடிவு கட்டும் நேரம் வந்தாச்சு... வெளியானது மஹிந்திரா இகேயூவி100 மின்சார கார் அறிமுக விபரம்
மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் மஹிந்திரா நிறுவனத்தின் இகேயூவி100 மின்சார காரின் அறிமுகம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியர்களின் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் கார்களில் மஹிந்திரா இகேயூவி100 மாடல் காரும் ஒன்று. இது ஓர் மின்சார காராகும். மஹிந்திரா நிறுவனம் ஏற்கனவே சிறிய ரக மின்சார காரை இந்தியாவில் விற்பனையில் ஈடுபடுத்தி வந்தது குறிப்பிடத்தகுந்தது. குறிப்பிட்ட சில காரணங்களுக்காக அக்கார் தற்போது சந்தையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்தே கேயூவி 100 மாடலின் அடிப்படையில் மஹிந்திரா நிறுவனம் மின்சார காரை அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த கார் இதோ இப்போது அறிமுகமாகிவிடும், அப்போது அறிமுகமாகிவிடும் என இணையத்தில் பல வதந்திகள் பரவி வருகின்றன. இந்த நிலையில், மஹிந்திரா நிறுவனத்தின் எம்டி-யும், சிஇஓ-வுமான பவன் கோயன்கா இகேயூவி100 மின்சார கார் எப்போது அறிமுகமாகும் என்ற தகவலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

இன்று (29 அக்டோபர்) மஹிந்திரா நிறுவனத்தின் மூன்று சக்கர மின்சார வாகனங்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டபோதே பவன் கோயன் இகேயூவி100 விற்பனை விபரம் பற்றிய தகவலை வெளியிட்டார். அவர் கூறியதன்படி, இன்னும் மூன்று மாதங்களில் இகேயூவி100 மின்சார கார் விற்பனைக்கு வரும் என்பது தெரியவந்துள்ளது.

மிக தெளிவாக கூற வேண்டுமானால் அடுத்த மூன்று மாதங்களுக்கு உள்ளாகவே இகேயூவி100 மின்சார எஸ்யூவி கார் மக்களின் கைகளில் பயன்பாட்டிற்கே வந்துவிடும் என அவர் கூறியிருக்கின்றார். மஹிந்திரா நிறுவனம் இக்காரை கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற இந்திய ஆட்டோ எக்ஸ்போவில்தான் முதல் முறையாக காட்சிப்படுத்தியது.

இதைத்தொடர்ந்தே, தற்போது அக்காரின் உற்பத்தி பணியில் மஹிந்திரா தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இதன் விளைவு, இன்னும் 3 மாதங்களில் அக்கார் விற்பனைக்கு வரவிருக்கின்றது. இக்காருக்கு ஆரம்ப விலையாக 8.25 லட்சம் ரூபாய் நிர்ணயித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விலை மற்றும் மின்சார காரில் இடம்பெற்றிருக்கும் வசதிகள் தற்போது விற்பனையில் இருக்கும் டாடா நெக்ஸான் மின்சார காருக்கு எதிர் போட்டியாளனாக இகேயூவி100 காரை அமர வைத்திருக்கின்றது.

இக்காரில் மஹிந்திரா நிறுவனம் லிக்யூடு கூல்டு பேட்டரி பேக்கை பயன்படுத்தியிருப்பதாக கூறப்படுகின்றது. இது வெறும் 55 நிமிடங்களில் 80 சதவீத சார்ஜை பெறும் திறன் கொண்டதாகும். மேலும், ஆட்டோ டிரான்ஸ்மிஷன், ஃபாஸ்ட் சார்ஜ் மற்றும் ரிமோட் கனெக்ஷன் என பல்வேறு சிறப்பு தொழில்நுட்ப வசதிகளுடன் இகேயூவி100 விற்பனைக்கு வரவிருக்கின்றது.

இத்துடன், ரிமோட்டால் டூரை லாக் மற்றும் அன்லாக் செய்யும் வசதி, கேபின் ப்ரீ கூலிங் ஆப்ஷன், லொகேஷன் டிராக்கிங், டிரைவிங் பேட்டர்ன் மானிட்டர், 7இன்ச் கொண்ட தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டியரிங் மவுண்டட் ஆடியோ கன்ட்ரோல் மற்றும் ட்யூவல் ஏர்பேக் உள்ளிட்ட ஏராள வசதிகளும் இகேயூவி100 மின்சார காரில் வழங்கப்பட இருக்கின்றன.

இந்த மின்சார காரை மெஸ்மா 48 (MESMA 48) எனும் பிளாட்பாரத்தில் வைத்தே மஹிந்திரா தயாரித்துள்ளது. எனவேதான் வழக்கமான எரிபொருள் மாடல் கேயூவி100 மாடலுக்கும், இகேயூவி100 மாடலுக்கும் பெரியளவில் உறுவ வித்தியாசம் தெண்படவில்லை. அதேசமயம், மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் பெட்ரோல், டீசல் மாடல்களில் இருந்து வேறுபடும் வகையில் க்ரில் அமைப்பு மாற்றப்பட்டுள்ளது.

இது எலெக்ட்ரிக் கார் என்பதை பரைசாற்றும் வகையில் நீல வண்ண அலங்காரங்களைக் கொண்டிருக்கின்றது. இது இகேயூவி100 மின்சாரக் காருக்கு தனித்துவமான தோற்றத்தை வழங்கும் வகையில் இருக்கின்றது. இக்கார் முழுமையான சார்ஜில் 120 கிமீட்டர் வரை ரேஞ்ஜை வழங்கும் என தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் கூறுகின்றன. இந்த திறனை வழங்கக்கூடிய 15.9 kWh பேட்டரியே இதில் பொருத்தப்பட்டிருக்கின்றது.

மேலும், இதில் இடம்பெற்றிருக்கும் மின் மோட்டார் 54.35 பிஎஸ் மற்றும் 120 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைப் பெற்றிருக்கின்றது. இத்தகைய சிறப்பு திறன் கொண்ட மின்சார காரையே மஹிந்திரா நிறுவனம் விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








