ஒரே சார்ஜில் 370 கிமீ பயணம்... அசத்த வரும் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் கார்!
மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் ரேஞ்ச் விபரம் குறித்த வெளியானத் தகவல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

எலெக்ட்ரிக் கார் சந்தையில் உள்நாட்டு நிறுவனங்களான டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள் தங்களது வலிமையை காட்டுவதற்கு போட்டா போட்டியில் இறங்கி இருக்கின்றன. அண்மையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

பதிலுக்கு மஹிந்திரா நிறுவனமும் கேயூவி100 எலெக்ட்ரிக் எஸ்யூவியை களமிறக்கியது. இதுதான் இந்தியாவின் விலை குறைவான எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலாக இருக்கிறது. இந்த நிலையில், டாடா நெக்ஸான் எஸ்யூவிக்கு நேர் போட்டியாக புதிய மாடலை களமிறக்கும் முனைப்பில் மஹிந்திரா இறங்கி இருக்கிறது.

இதற்காக, தனது எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் மின்சார மாடலை சந்தைக்கு கொண்டு வரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. அண்மையில் நடந்து முடிந்த ஆட்டோ எக்ஸ்போவில் இந்த கார் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

இந்த சூழலில், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி ஏற்கனவே மிக சவாலான விலையில் வந்துள்ள நிலையில், மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் காரை அதிக சிறப்பம்சங்கள் கொண்டதாக சந்தைக்கு கொண்டு வர வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

இதனை மனதில் வைத்து, டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரைவிட அதிக தூரம் பயணிக்கும் திறன் வாய்ந்த பேட்டரியுடன் எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் கார் மாடலை மஹிந்திரா கொண்டு வர இருக்கிறது.

ஆட்டோ எக்ஸ்போவின்போது தி குயிண்ட் பத்திரிக்கைக்கு பேட்டி அளித்துள்ள மஹிந்திரா எலெக்ட்ரிக் பிரிவு தலைமை செயல் அதிகாரி மகேஷ் பாபு கூறுகையில்," ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த எங்களது மின்சார வாகனங்கள் அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களையும் கவரும் வகையில், பட்ஜெட்டிலும், ரகத்திலும் காட்சிப்படுத்தி இருக்கிறோம்.

இதில், எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் மாடலானது தனிநபர் சந்தையை குறிவைத்து களமிறக்கப்படும். இந்த மின்சார எஸ்யூவியை 370 கிமீ தூரம் பயணிக்கும் திறனை வழங்கும் பேட்டரியுடன் கொண்டு வர இருக்கிறோம்.

தவிரவும், எங்களது MESMA 350 எலெக்ட்ரிக் கார் உருவாக்கக் கொள்கையின் கீழ் ஒரே சார்ஜில் 500 கிமீ தூரம் பயணிக்கும் மின்சார கார் மாடலையும் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்," என்று தெரிவித்துள்ளார்.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் 312 கிமீ தூரம் பயணிக்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு நேர் போட்டியாக வர இருக்கும் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் எஸ்யூவி 370 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் என்பது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மதிப்பை வழங்கும்.

அதேநேரத்தில், மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் கார் இரண்டு விதமான பேட்டரி திறன்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. ஒன்று குறைவான தூரம் பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். தற்போது மகேஷ் பாபு தெரிவித்துள்ள மாடலானது அதிக தூரம் பயணிக்கும் விலை உயர்ந்த மாடலாக அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது.
Source: The Quint


Click it and Unblock the Notifications








