மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் கார் அறிமுகம் குறித்த ஏமாற்றமான தகவல்!
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள, மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் அறிமுகம் குறித்து புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொரோனா பிரச்னையால் புதிய கார்களின் அறிமுகங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மத்தியிலும், பிற்பாதியிலும் வர வேண்டிய பல புதிய கார்கள் அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போய்விட்டன. மேலும், எலெக்ட்ரிக் கார்களுக்கான சந்தை மெல்ல சூடுபிடித்த நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக, எலெக்ட்ரிக் கார்களின் வருகையிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக, தனது கேயூவி100 எலெக்ட்ரிக் காரின் டெலிவிரிப் பணிகளை மஹிந்திரா தள்ளி வைத்துள்ளது. அதேபோன்று, கடந்த பிப்ரவரி மாதம் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் அறிமுகமும் அடுத்த நிதி ஆண்டுக்கு மாறி இருக்கிறது.

இதனை கார் அண்ட் பைக் தளத்திடம் பேசிய மஹிந்திரா அதிகாரி வீஜே ராம் நக்ரா கூறி இருக்கிறார். இந்த நிதி ஆண்டில் எஸ்யூவி300 எலெக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்படாது என்பதையும் உறுதிபடுத்தி உள்ளார். அடுத்த நிதி ஆண்டு காலத்தில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த பிப்ரவரியில் ஆட்டோ எக்ஸ்போவில் வைத்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட கேயூவி100 எலெக்ட்ரிக் எஸ்யூவியின் டெலிவிரிப் பணிகள் சற்று தாமதம் ஏற்படும். இந்த ஆண்டு இறுதியில் கேயூவி100 எலெக்ட்ரிக் எஸ்யூவியின் டெலிவிரிப் பணிகள் துவங்கும் என்று அவர் தெரிவித்துளளார்.

இந்தியாவின் மிக குறைவான விலை எஸ்யூவி மாடலாக கேயூவி100 எலெக்ட்ரிக் எஸ்யூவி கடந்த பிப்ரவரி மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ரூ.8.25 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டதால், வாடிக்கையாளர் மத்தியிலும் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்த எஸ்யூவியில் 40kW திறன் கொண்ட மின் மோட்டார் உள்ளது. இந்த மின் மோட்டார் 53 பிஎச்பி பவரையும், 120 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதன் 15.9kWh லித்தியம் அயான் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 120 கிமீ தூரம் வரை பயணிக்கலாம்.

அதேநேரத்தில், எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் எஸ்யூவியில் 40kWh பேட்டரி பயன்படுத்தப்பட உள்ளது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 300 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும்.

இது தனிநபர் வாடிக்கையாளர்களை கவரும் ஏராளமான அம்சங்களை கொண்டுள்ளது. இதனால், எதிர்பார்ப்பும் அதிகம் இருந்தது. ஆனால், தற்போது கொரோனாவால் எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் எஸ்யூவியின் அறிமுகம் அடுத்த நிதி ஆண்டுக்கு தள்ளிப்போயுள்ளது. டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கு நேரடி போட்டியாக இந்த புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் எஸ்யூவி இருக்கும்.


Click it and Unblock the Notifications








