கொரோனாவை கண்டு பயப்படாதீங்க! இலவச காப்பீட்டு திட்டத்தை வழங்கும் மஹிந்திரா! யாரால் பயன்பெற முடியும்?
இந்திய வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா, இலவச கோவிட்19 வைரஸ் காப்பீட்டு திட்டத்தை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதனை யாரால் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதைத் தொடர்ந்து பார்க்கலாம்.

கொரோனா வைரஸ் பரவல் ஏழு மாதங்களைக் கடந்தும் இந்தியாவில் மிக தீவிரமாகப் பரவிக் கொண்டிருக்கின்றது. இதனால் மார்ச் மாதத்தின் இறுதியில் நடைமுறைக்கு வந்த பொதுமுடக்கம் தற்போதும் லேசான தளர்வுகளுடன் நீடித்த வண்ணம் இருக்கின்றது. பரவல் ஒரு புறம் தீவிரம் காட்டி வந்தாலும், மக்கள் தங்களின் அன்றாட வாழ்வாதரத்தைக் கருத்தில் கொண்டு வெளியில் வர ஆரம்பித்துள்ளனர்.

எனவே, தொற்று எப்படி வேண்டுமானாலும் பரவலாம் என்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இதனைக் கருத்தில் கொண்ட மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களைக் காக்க வேண்டும் என்பதற்காக கணிசமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா, அதன் வாடிக்கையாளர்களைக் கொரோனா வைரசிடம் இருந்து காக்கும் விதமாக இலவச காப்பீட்டு திட்டத்தை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.

இது அனைவருக்குமான திட்டம் கிடையாது. மிக சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா பொலிரோ பிக்-அப் டிரக்கை புதிதாக வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். இதனை மஹிந்திரா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதன் மூலம் ரூ. 1 லட்சம் வரை மஹிந்திரா பொலிரோ பிக்-அப் டிரக்கின் வாடிக்கையாளரால் பயனடைய முடியும். இந்த காப்பீட்டு திட்டம் பொலிரோ பிக்-அப் டிரக்கை வாங்கும் நபருக்கு மட்டுமின்றி அவருடைய மனைவி அல்லது கணவனுக்கும் பொருந்தும் என கூறப்படுகின்றது. மேலும், அவர்களின் குழைந்தைகளும் காப்பீட்டு திட்டத்தில் அடங்குவார்கள்.

ஆகையால், புதிதாக பிக்-அப் டிரக்கை வாங்குபவரின் குடும்பத்தினர் அனைவராலும் மஹிந்திரா நிறுவனத்தின் கொரோனா காப்பீட்டு திட்டத்தில் பயன் பெற முடியும் என்பது தெரிய வந்துள்ளது. சிறப்பு சலுகையாக வழங்கப்படும் இந்த காப்பீட்டு திட்டம் புதிய டிரக்கை வாங்கிய அன்றைய தினத்தில் இருந்து 9.5 மாதங்கள் வரை செல்லுபடியாகும் ஆகும் என கூறப்படுகின்றது.

பொலிரோ பிக்-அப், பொலிரோ மேக்ஸி டிரக், பொலிரோ சிட்டி பிக்-அப் மற்றும் பொலிரோ கேம்பர் ஆகிய வாகனங்களுக்கே கொரோனா இலவச காப்பீட்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு சலுகையை குறிப்பிட்டு காலங்கள் வரை மட்டுமே வழங்கப்படும் என மஹிந்திரா அறிவித்துள்ளது.

அதாவது, வருகின்ற நவம்பர் 30 வரை மட்டுமே கொரோனா இலவச காப்பீட்டு திட்டத்தை பொலிரோ டிரக்கை புதிதாக வாங்கும் வாடிக்கையாளர்களால் பெற முடியும். கடந்த 1ம் தேதியில் இருந்தே இத்திட்டம் பயன்பாட்டில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சத்தமே இல்லாமல் ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட்டம் பொலிரோ பிக்-அப் டிரக் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற ஆரம்பித்துள்ளது.

இந்த தனித்துவமான முன்முயற்சி குறித்து மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட், ஆட்டோமொடிவ் பிரிவின், விற்பனை மற்றும் வாடிக்கையாளர் பராமரிப்பு துறையின் மூத்த துணைத் தலைவர் சதிந்தர் சிங் பஜ்வா கூறியதாவது, "அத்தியாவசிய பொருட்களின் தேவையைப் பூர்த்தி செய்வதில் பிக்-அப் டிரக் வாகன ஓட்டிகளின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. நேரம்-காலம் பார்க்காமல் கடிகாரத்தைப் போன்று அவர்கள் செயல்படுகின்றனர். இத்தகையோரைப் பாதுகாக்கு விதாகவும், ஆதரவு அளிக்கும் விதமாகவும் புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளோம்" என்றார்.

மேலும் பேசிய அவர், "மஹிந்திரா வெகுவிரைவில் 75 ஆண்டு விழாவைக் கொண்டாட இருக்கின்றது. இதனுடன் ஒத்துப்போகும் வகையில் நாட்டிலேயே முதல் முறையாக தனித்துவமான திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கின்றோம். இதன்மூலம், எங்களைச் சார்ந்து இருக்கும் அனைவரும் சாதகமான சூழலைப் பெறுவார்கள் என நம்புகின்றோம்" என்று கூறினார்.

மஹிந்திரா நிறுவனத்தின் சிறப்பு திட்டத்தைப் பெறுவது எப்படி?
மஹிந்திரா பொலிரோ வரிசையில் விற்பனைக்குக் கிடைக்கும் ஏதேனும் ஓர் பிக்-அப் டிரக்கை புதிதாக வாங்கும் வாடிக்கையாளர், அவரது பெயர், பிறந்த தேதி மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் பற்றிய அனைத்து தகவலையும் வழங்க வேண்டும். இதனடிப்படையில், மஹிந்திரா நிறுவனம் காப்பீட்டு நிறுவனத்தில் பதிவு செய்து, அதற்கான அட்டை அல்லது சான்றை வழங்கும்.

இதை வைத்துக் கொண்டு, ஒரு வேலை பிக்-அப் டிரக்கை வாங்கியவரோ அல்லது அவருடைய குடும்ப உறுப்பினர் யாரேனும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டால் காப்பீட்டு நிறுவனம் வழிகாட்டும் மருத்துவமனை ஏதேனும் ஒன்றில் சென்று ரூ. 1 லட்சம் வரையிலான இலவச மருத்துவத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். இந்த சிறப்பு திட்டத்தைதான் குறுகிய கால சலுகையாக மஹிந்திரா வழங்கி வருகின்றது.

புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனில் விற்பனைக்குக் கிடைக்கும் மஹிந்திரா பொலிரோ பிக்-அப் டிரக்குகள் பிஎஸ்6 தர எஞ்ஜினுடன் விற்பனைக்குக் கிடைக்கின்றன. 1.5 லிட்டர், 3 சிலிண்டர், எம்-ஹாவ்க் 75 டீசல் எஞ்ஜினே அதில் பயன்படுத்தப்படுகின்றன. இது, அதிகபட்சமாக 75 பிஎச்பி பவரை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. மேலும், இந்த எஞ்ஜின்கள் 5 - ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்குகின்றன.


Click it and Unblock the Notifications








