மஹிந்திரா மராஸ்ஸோ காரின் பெட்ரோல் மாடல் அறிமுக விபரம்
மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரின் பெட்ரோல் மாடல் எப்போது அறிமுகம் செய்யப்பட இருக்கிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்தியாவின் எம்பிவி கார் மார்க்க்டெ்டில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, மாருதி எர்டிகா கார்களுக்கு அடுத்து மஹிந்திரா மராஸ்ஸோ சிறந்த தேர்வாக உள்ளது. இடவசதி, தொழில்நுட்ப அம்சங்கள், விலை என அனைத்திலும் மஹிந்திரா மராஸ்ஸோ கார் வாடிக்கையாளர்களுக்கு நிறைவை தரும் வகையில் இருந்து வருகிறது.

மஹிந்திரா மராஸ்ஸோ காரில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வில் கிடைத்து வருகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 121 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கிறது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் தேர்வில் கிடைத்து வருகிறது. இந்த டீசல் எஞ்சின் மாடல் விரைவில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக வர இருக்கிறது.

இந்த நிலையில், மஹிந்திரா மராஸ்ஸோ காரில் பெட்ரோல் எஞ்சின் தேர்வும் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. கடந்த பல மாதங்களாக சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருந்த பெட்ரோல் எஞ்சின் மாடல் தற்போது விற்பனைக்கு உகந்த நிலையை எட்டி இருக்கிறது.

இதனால், பெட்ரோல் மாடலுக்கான அறிமுக காலத்தை மஹிந்திரா நிர்ணயித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன்படி, வரும் மே மாதம் மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரில் பெட்ரோல் எஞ்சின் தேர்வு விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

கடந்த மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் மஹிந்திரா நிறுவனம் எம்ஸ்டாலியன் என்ற பெயரில் புதிய பெட்ரோல் எஞ்சின்களை காட்சிப்படுத்தி இருந்தது. இந்த புதிய பெட்ரோல் எஞ்சின்கள் மஹிந்திரா, சாங்யாங் மற்றும் ஃபோர்டு கார்களில் பயன்படுத்தப்பட இருக்கின்றன.

இதில், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வானது மஹிந்திரா மராஸ்ஸோ காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இந்த புதிய டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 163 எச்பி பவரையும், 280 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும்.

இந்த புதிய பெட்ரோல் எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் அசின் நிறுவனத்தின் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கொண்டு வரப்பட இருக்கிறது.

மஹிந்திரா மராஸ்ஸோ காரின் பெட்ரோல் எஞ்சின் எதிர்பார்ப்பதைவிட அதிக சக்திவாயந்ததாக இருப்பதால், வாடிக்கையாளர்களின் கவனம் டீசலைவிட பெட்ரோல் பக்கம் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா நிறுவனத்தின் எம்ஸ்டாலியன் குடும்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் வரும் முதல் கார் மாடல் என்ற பெருமையும் மஹிந்திரா மராஸ்ஸோவுக்கு கிடைக்கும்.

புதிய மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வருவதால், டீசல் மாடல்களின் எதிர்காலம் குறித்த ஐயப்பாடும், வாங்குவதற்கு வாடிக்கையாளர் மத்தியில் தயக்கமும் நிலவுகிறது. இதற்கு மராஸ்ஸோ காரில் பெட்ரோல் எஞ்சின் தேர்வு சிறந்த தீர்வாக இருக்கும் என்று மஹிந்திரா நம்புகிறது.
Source: Autocarindia


Click it and Unblock the Notifications








