ரூ.1 கோடியை கடந்து செல்லும் 2020 மஹிந்திரா தாரின் முதல் யூனிட்டிற்கான ஏலம்... வெற்றி பெற போவது யார்?
தார் #1 என அழைக்கப்படும் 2020 மஹிந்திரா தார் மாடலின் முதல் யூனிட் ஏல தொகை ரூ.1 கோடியை கடந்து வாடிக்கையாளர்கள் அனைவரையும் ஆச்சிரியப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தயாரிப்பாக 2020 தார் வருகிற அக்டோபர் 2, காந்து ஜெயந்தி தினத்தின்போது வெளியிடப்படவுள்ளது. மேலும் இந்த தினம் மஹிந்திரா நிறுவனத்தின் நிறுவன நாளும் ஆகும்.

இந்த சிறப்புமிக்க நாளை முன்னிட்டுதான் 2020 தார் அந்த நாளில் அறிமுகமாகுகிறது. இதற்கு முன்னதாக தயாரிப்பு பணிகள் முடிக்கப்பட்ட முதல் 2020 தார் கடந்த 24ஆம் தேதியில் இருந்து இணையத்தில் ஏலம் விடப்பட்டு வருகிறது. இன்றுடன் (செப்.29) நிறைவு பெறவுள்ள இந்த ஏலம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

நேற்று ரூ.90 லட்சத்தை தாண்டிய இதன் ஏலத்தொகை தற்போது, நிறைவு பெறும் நேரத்தில் ரூ.1 கோடியை கடந்துள்ளது. ஏலத்தை இந்த தொகையில் டெல்லியை சேர்ந்த ஆகாஷ் மிண்டா என்பவர் நிறுத்தினார். ஆனால் இவரையும் முந்தி கொண்டு மெடினாபூரை சேர்ந்த அபிஷேக் தத்தா என்பவர் ரூ.1.02 கோடியில் தார் #1-ஐ ஏலம் எடுத்துள்ளார்.

இந்த ஏலத்தில் மொத்தம் 5444 பேர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஏலம் ரூ.25,000-ல் இருந்து ஆரம்பித்தது. இதுவரை மொத்தம் எத்தனை ஏலம் பதிவாகியுள்ளது என்பது குறித்த தகவல் எதுவும் கிடைக்க பெறவில்லை. நாங்கள் முன்பே சொன்னது போலதான், தார் #1-இன் இந்த ஏலம் ஒரு நல்ல காரணத்திற்காக நடத்தப்படுகிறது.

அதாவது இதன் மூலம் கிடைக்கும் தொகை கோவிட்-19 நிவாரணப் பணிகள் தொடர்பான உன்னதமான காரணத்திற்காக செலவிடப்படவுள்ளது. மஹிந்திரா ஏலத்தில் திரட்டப்பட்ட முழு வருமானமும் கோவிட்-19 நிவாரணத்தை ஆதரிக்கும் ஒரு தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ளதாக ஏற்கனவே மஹிந்திரா நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்த ஏலத்தில் இறுதியாக வெற்றி பெறுவர் #1 முத்திரை பொறிக்க முதல் 2020 தாரை ஐந்து வேரியண்ட்கள் மற்றும் ஆறு நிறத்தேர்வுகளில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். அதேபோல் தொண்டு நிறுவனங்களையும் மூன்றில் ஒன்றை வெற்றி பெறும் வாடிக்கையாளர் தேர்வு செய்யலாம்.

இந்த மூன்றில், தற்போதைய கோவிட்-19 காலத்தில் உணவு மற்றும் வேளாண் துறைகளில் நிலையான வாழ்வாதாரத்தை உருவாக்கும் நந்தி அறக்கட்டளை, கோவிட்-19 நிவாரண மற்றும் மீட்பு திட்டத்தின் ஒரு பகுதியாக கிராமப்புற வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களை கட்டமைக்கும் ஸ்வேட்ஸ் அறக்கட்டளை மற்றும் பிரதமர் நிவாரண நிதி உள்ளிட்டவை அடங்குகின்றன.

இந்த ஏலத்தில் வெற்றி பெறும் வாடிக்கையாளர் குறித்த விபரங்களை வருகிற அக்டோபர் 2ஆம் தேதி 2020 தாரின் அறிமுகத்தின்போது மஹிந்திரா நிறுவனம் வெளியிடவுள்ளது. 2020 தாரின் முதல் வாடிக்கையாளராக அங்கீகரிக்கபடவுள்ள அவரது பெயரின் முதல் எழுத்தும் அவர் பெறும் தார் வாகனத்தில் பொறிக்கபட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








