மருத்துவ பணியாளர்களுக்கான விசேஷ முக கவசத்தை தயாரிக்கும் மஹிந்திரா!
கொரோனா மருத்துவப் பணியாளர்களுக்காக விசேஷ முக கவசத்தை மஹிந்திரா உருவாக்கி வருகிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கொரோனா வைரஸ் எதிர்ப்பு போராட்டத்தில் மஹிந்திரா தீவிரம் காட்டி வருகிறது. தனது கார் ஆலை மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களை கொண்டு கொரோனா எதிர்ப்புக்கான மருத்துவ உபகரணங்களை தயாரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. தன்னால் இயன்ற அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க தயாராகி வருகிறது.

ஏற்கனவே, கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வென்டிலேட்டர்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதற்கான புரோட்டோடைப் மாடலையும் உருவாக்கி அறிமுகம் செய்துள்ளதுடன், அதனை அடுத்த கட்ட ஆய்வுக்கும் கொண்டு சென்றுள்ளது.

இந்த வென்டிலேட்டர்கள் மிக விரைவில் பயன்பாட்டுக்கு உகந்த நிலையில் மருத்துவத் துறையினருக்கு வழங்கப்பட உள்ளது. மஹிந்திரா ஆலைகளில் இதற்கான உற்பத்திப் பணிகள் நடக்க இருக்கிறது.

இந்த நிலையில், கொரோனா சிகிச்சை பிரிவுகளில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்காக விசேஷ முக கவசங்களை அந்நிறுவனம் உருவாக்கி உள்ளது.

இந்த முக கவரம் சாதாரண வகை முககவசங்களை விட அதிக பாதுகாப்பை வழங்க வல்லதாக இருக்கும். நாளை முதல் இந்த விசேஷ முக கவசங்களை தயாரிக்கும் பணிகள் துவங்க இருப்பதாக மஹிந்திரா நிர்வாக இயக்குனர் பவன் கொயங்கோ தெரிவித்துள்ளார்.

தனது கூட்டணி நிறுவனமான ஃபோர்டு மோட்டார் நிறுவனத்திடமிருந்து இந்த முக கவசத்திற்கான வடிவமைப்பு யுக்திகளை பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை (நாளை) முதல் நாள் ஒன்றுக்கு 500 எண்ணங்களில் முதல்கட்டமாக மருத்துவ முக கவசங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், படிப்படியாக இந்த எண்ணங்கள் உயர்த்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








