மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் மின்சார மாடல் விரைவில் தரிசனம்
மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் எலெக்ட்ரிக் எஸ்யூவியின் கான்செப்ட் மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

எலெக்ட்ரிக் எஸ்யூவி சந்தையில் மிக வலுவான போட்டியாளராக முன்னிறுத்தும் முயற்சிகளில் மஹிந்திரா தொடர்ந்து செயலாற்றி வருகிறது. இதற்கான தக்க தருணமாக, அடுத்த வாரம் துவங்க இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவை பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளது.

அதன்படி, 4 புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி கான்செப்ட் மாடல்களை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்த மஹிந்திரா முடிவு செய்துள்ளது. இதற்கான டீசரை இன்று அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில், அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ள மாடலாக எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் எலெக்ட்ரிக் மாடல் அமைந்துள்ளது. குறிப்பாக, புதிய தலைமுறை மாடலாக உருவாக்கப்பட்டு வரும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் அடிப்படையில் இந்த புதிய எலெக்ட்ரிக் கான்செப்ட் மாடல் வடிவமைக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

ஏனெனில், இந்த ஆண்டு புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் பெட்ரோல், டீசல் மாடல்கள் பிஎஸ்-6 எஞ்சின்களில் எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து, எலெக்ட்ரிக் வெர்ஷனையும் கொண்டு வரும் முனைப்பில் இறங்கி உள்ளது மஹிந்திரா.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எலெக்ட்ரிக் கான்செப்ட் மாடலுக்கு அடுத்தகாக மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் எலெக்ட்ரிக் மாடல் காட்சிப்படுத்தப்படுவது உறுதியாகி இருக்கிறது. இது இ-எக்ஸ்யூவி300 என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. இது கிட்டத்தட்ட தயாரிப்பு நிலைக்கு உகந்த மாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் எஸ்யூவியில் 40kWh பேட்டரி பயன்படுத்தப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது. அதிகபட்சமாக 130 எச்பி பவரை வழங்கும் திறன் கொண்ட மின் மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கும்.

எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் மாடலானது இரண்டு விதமான திறன் கொண்ட பேட்டரி மாடல்களில் எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்று விலை குறைவானதாகவும், குறைவான ரேஞ்ச் கொண்டதாகவும் இருக்கும். மற்றொன்று அதிக பயண தூரத்தை வழங்கும் விலை உயர்ந்த மாடலாக இருக்கும்.

இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கு ஏசி சார்ஜர் மற்றும் டிசி ஃபாஸ்ட் சார்ஜர் தேர்வுகள் வழங்கப்படும். எல்ஜி கெம் நிறுவனம் இந்த காருக்கான பேட்டரியை சப்ளை செய்ய இருக்கிறது. அடுத்த ஆண்டு இந்த புதிய மாடல் சந்தைக்கு கொண்டு வரப்படும்.

மூன்றாவது மாடலாக கேயூவி100 எஸ்யூவியின் எலெக்ட்ரிக் மாடல் காட்சிப்படுத்தப்பட இருக்கிறது. இந்த மாடலானது தயாரிப்பு நிலை மாடலாகவே ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வரும் ஏப்ரல் முதல் ஜூன் இடையிலான காலக்கட்டத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்புள்ளது. ரூ.10 லட்சத்திற்குள் விலை நிர்ணயிக்கப்பட உள்ளதாக ஏற்கனவே மஹிந்திரா தெரிவித்துள்ளதால், அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

நான்காவது மாடலாக மஹிந்திரா நிறுவனத்தின் புத்தம் புதிய குவாட்ரிசைக்கிள் வாகனமாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இது மின்சார மாடலாக வர இருப்பதாகவும் தெரிகிறது. இதனால், இந்த நான்கு மஹிந்திரா எலெக்ட்ரிக் வாகனங்கள் ஆட்டோ எக்ஸ்போ வரும் பார்வையாளர்களை வெகுவாக ஈர்க்கும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications








