டீலர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டது மாருதி!
டீலர்களில் வர்த்தக செயல்பாடுகளை துவங்கும் விதமாக, கொரோனா தடுப்புக்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மாருதி சுஸுகி வெளியிட்டு இருக்கிறது.

கொரோனா பிரச்னையால் கார் ஆலைகளும், டீலர்களும் ஒன்றரை மாத காலமாக மூடப்பட்டுள்ளன. இதனால், பெரும் பொருளாதார இழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் வர்த்தக நடவடிக்கைகளை துவங்குவதற்கு நிபந்தனைகளுடன் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதனை பயன்படுத்தி, கார் உற்பத்தி மற்றும் டீலர்களில் விற்பனையை துவங்கும் முயற்சிகளில் கார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகி கார் விற்பனையை துவங்குவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

இதன்படி, டீலர்களில் பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி, தனது டீலர் பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் மற்றும் அறிவுறுத்தல்களை மாருதி சுஸுகி வழங்கி உள்ளது.

கார் ஷோரூம்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தினசரி உடல் வெப்ப நிலை அளவு பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். சமூக இடைவெளியை ஷோரூமிற்குள் கடைபிடித்தல் அவசியம். ஷோரூமை குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒருமுறை தினசரி சுத்தப்படுத்துவதுடன் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.

கார் ஷோரூமில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அங்கு வரும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். ஷோருமிற்குள் நுழையும்போதே சேனிட்டைசர் மூலமாக கைகளை சுத்தப்படுத்திக் கொள்வது அவசியம். இதற்காக, ஷோரூம்களில் சேனிட்டைசர் உள்ளிட்டவை வைக்கப்பட்டு இருக்க வேண்டும்.

ஷோரூம் பணியாளர்கள் சுழற்சி நேர அட்டவணையின்படி, மதிய உணவு சாப்பிடுவதற்கு அனுமதிக்க வேண்டும். வீட்டிலேயே கார் டெலிவிரி மற்றும் கார் சர்வீஸ் செய்ய டோர் பிக்கப் செய்ய செல்லும் பணியாளர்களும் முக கவசம் அணிந்து செல்வதுடன், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கையில் கிருமி நாசினி திரவத்தை எடுத்துச் செல்வதும் அவசியம்.

இதுதவிர்த்து, வாடிக்கையாளர் நலன் கருதி, ஆன்லைன் மூலமாக கார்களை புக்கிங் செய்து டோர் டெலிவிரி பெறுவது, ஆவணங்களை சமர்ப்பிதற்கான வசதியையும் மாருதி சுஸுகி அறிமுகப்படுத்தி உள்ளது. ஷோரூம்களில் கார் விற்பனை ஓரளவு சுறுசுறுப்படைந்த உடன், கார் உற்பத்தியை மாருதி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, க்ரீன் ஸோன் எனப்படும் பாதிப்பு இல்லாத பகுதிகளில் உள்ள மாருதி சுஸுகி டீலர்கள் திறக்கப்பட்டு, கார் டெலிவிரியும் வாடிக்கையாளர் வீட்டிலேயே கொடுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லாக் டவுனுக்கு முன்னால் வந்த புதிய மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, புதிய டிசையர் கார்களை புக்கிங் செய்து காத்திருப்பவர்களுக்கு விரைவில் டெலிவிரி கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதேபோன்று, எஸ் க்ராஸ் பிஎஸ்6 மாடலையும் விரைவில் மாருதி சந்தைக்கு கொண்டு வர இருக்கிறது.


Click it and Unblock the Notifications








