கொரோனாவால் மாருதிக்கு பெரும் இழப்பு... மே மாத கார் விற்பனையில் கடும் சரிவு!
கொரோனாவால் மாருதி கார் நிறுவனம் மிகப்பெரிய இழப்பை சந்தித்து வருகிறது. கடந்த மே மாதத்திலும் அந்நிறுவனத்தின் விற்பனையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 24ந் தேதி முதல் தேசிய ஊரடங்கு அமலுக்கு வந்ததையடுத்து, மாருதி கார் நிறுவனத்தின் ஆலைகளும், டீலர்களும் மூடப்பட்டன. தொடர்ந்து ஒன்றரை மாதங்களுக்கு மேலாக உற்பத்தியும், விற்பனையிலும் அடியோடு முடங்கியது.

இந்த நிலையில், பொருளாதார பாதிப்புகளை கருதி, தொற்று குறைவான பகுதிகளில் மத்திய, மாநில அரசுகள் தொழில்களை மீண்டும் துவங்குவதற்கு சிறப்பு அனுமதி கொடுத்தன. இதனை பயன்படுத்தி, தொற்று குறைவான பகுதிகளில் உள்ள ஷோரூம்களை மாருதி கார் நிறுவனம் படிப்படியாக திறந்தது.

பல்வேறு வழிகாட்டு முறைகளையும் வெளியிட்டது. எனினும், தேசிய ஊரடங்கு தொடர்ந்து நீடித்து வருவதால், விற்பனையில் பெரிய அளவிலான முன்னெற்றம் இல்லை. இந்த சூழலில், சிறப்பு கார் கடன் திட்டங்கள், டோர் டெலிவிரி உள்ளிட்ட திட்டங்களை பயன்படுத்தி கார் விற்பனையை அதிகரிக்க மாருதி முயற்சி செய்து வருகிறது.

இதற்கு ஓரளவு பலன் கிடைத்து வருகிறது. எனினும், விற்பனை பழைய நிலையை எட்டுவதற்கு அடுத்த சில மாதங்கள் பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏப்ரலில் ஒரு கார் கூட விற்க முடியாத சூழலில் கடந்த மாத விற்பனை விபரத்தை மாருதி வெளியிட்டுள்ளது.

அதில், கடந்த மாதத்தில் 13,888 யூனிட்டுகளை உள்நாட்டில் விற்பனை செய்துள்ளதாக மாருதி கார் நிறுவனம் தெரிவித்துள்ளது. 4,651 கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. உள்நாடு, வெளிநாட்டு ஏற்றுமதியை சேர்த்து 18,539 கார்களை விற்பனை செய்துள்ளது. மேலும், டொயோட்டா கார் நிறுவனத்திற்கு 23 க்ளான்ஸா கார்களை வினியோகம் செய்துள்ளது.

கடந்த ஆண்டு மே மாதத்தில் உள்நாட்டில் 78,344 கார்களை விற்பனை செய்திருந்த மாருதி நிறுவனம், கடந்த மாதத்தில் 13,888 கார்களை மட்டுமே உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்துள்ளது. இது கிட்டத்தட்ட 86 சதவீத சரிவை சந்தித்துள்ளது.

இதனால், மாருதிக்கு பெரும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், கடந்த ஏப்ரல் மாதத்தில் பொது முடக்கம் முழுமையாக கடைப்பிடிக்கப்பட்டதால், ஒரு கார் கூட விற்பனை செய்ய முடியவில்லை. இந்த நிலையில், கடந்த மாதத்தில் 13,888 கார்களை உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்துள்ளது ஆறுதலான விஷயமாகவே பார்க்க முடிகிறது.

வரும் மாதங்களில் மாருதி கார் நிறுவனத்தின் விற்பனை படிப்படியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தொற்றுப் பாதிப்பு குறைந்தால், பண்டிகை காலம் கார் நிறுவனங்களுக்கு ஓரளவு கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications







