எளிய கார் கடன் திட்டத்தை அறிவித்தது மாருதி நிறுவனம்!
கொரோனா பிரச்னையால் புதிய கார் வாங்கும் திட்டத்தை ஒத்தி போட நினைக்கும் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கும் விதமாக, புதிய கார் கடன் திட்டங்களை மாருதி அறிவித்துள்ளது.

கொரோனா பிரச்னையால் கடந்த இரு மாதங்களாக தேசிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. கடந்த இரு வாரங்களாக ஊரடங்கு விதிகளில் தளர்வு அளிக்கப்பட்டு வருவதால், கொரோனா பாதிப்பு குறைவான பகுதிகளில் கார் நிறுவனங்கள் வர்த்தக செயல்பாடுகளை மீண்டும் துவங்கி இருக்கின்றன.

இந்த நிலையில், புதிய கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் கொரோனாவை கருதி, திட்டத்தை ஒத்திப் போடும் வாய்ப்பு இருக்கிறது. நிலைமை சீரடையும் வரை காத்திருக்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கின்றனர்.
MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

அவர்களுக்கு நம்பிக்கையூட்டி, உடனடியாக கார் வாங்கும் வகையில் சிறப்புக் கடன் திட்டங்களை கார் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன. அந்த வகையில், நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகியும் புதிய கார் கடன் திட்டத்தை அறிவித்துள்ளது.

சோழமண்டலம் பைனான்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த சிறப்பு கார் கடன் திட்டத்தை வழங்க உள்ளது மாருதி சுஸுகி. இந்த திட்டத்தின்படி, அதிக ஆண்டுகள் திருப்பி செலுத்தும் கால அவகாசம் வழங்கப்படுகிறது.

மேலும், Buy Now, Pay Later என்ற திட்டத்தின்படி, புதிய மாருதி கார் வாங்குவதற்கான கடன் அனுமதித்த நாளில் இருந்து முதல் 60 நாட்களுக்கு மாதத் தவணை செலுத்துவதிலிருந்து விலக்கு பெறும் வாய்ப்பு உள்ளது.

இதுதவிர்த்து, குறைவான முன்பணத்தை செலுத்தி, காரின் ஆன்ரோடு விலையில் 90 சதவீதம் வரை கடன் பெறும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்புக் கார் கடன் திட்டங்கள் புதிய மாருதி கார் வாங்க திட்டமிட்டிருப்போருக்கு அதிக மதிப்பையும், நம்பிக்கையையும் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சிறப்பு கார் கடன் திட்டம் குறித்து அருகாமையிலுள்ள மாருதி கார் ஷோரூமை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இந்த திட்டம் வாடிக்கையாளர்களுக்கு ஆசுவாசத்துடன் புதிய மாருதி கார் வாங்கும் வாய்ப்பை வழங்கும்.


Click it and Unblock the Notifications








