கார் உற்பத்தி துவங்குவதில் இருந்து திடீரென பின்வாங்கிய மாருதி... காரணம் என்ன?
மானேசர் ஆலையில் கார் உற்பத்தி துவங்குவதற்கு சிறப்பு அனுமதி கிடைத்த நிலையில், மாருதி கார் நிறுவனம் திடீரென பின்வாங்கி இருக்கிறது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொரோனா நெருக்கடியால் வரும் மே 3ந் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கையும், வர்த்தக செயல்பாடுகளும் முற்றிலும் முடங்கியுள்ளன. சிறு, குறு, நடுத்தர தொழில்கள் முதல் பெரிய முதலீட்டு தொழில்கள் வரை அனைத்துமே ஸ்தம்பித்து நிற்கின்றன.

இந்த நிலையில், கொரோனா தாக்கம் வாகனத் துறைக்கு பெரும் அடியை கொடுத்துள்ளது. கிட்டத்தட்ட கடந்த ஒரு மாத காலமாக வாகன உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், இரண்டாம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோதே, ஏப்ரல் 20 முதல் சில தொழிற்சாலைகள் நிபந்தனைகளுடன் இயங்குவதற்கு அனுமதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

அதாவது, கொரோனா பாதிப்பு இல்லாத அல்லது குறைவான பகுதிகளில் வர்த்தக செயல்பாடுகள், தொழிற்சாலைகள் இயங்குவதற்கு அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில், பல்லாயிரம் தொழிலாளர்களை கொண்ட மாருதி கார் நிறுவனம் உற்பத்தியை துவங்குவதற்காக, ஹரியானா மாநிலம், குர்கான் மாவட்ட நிர்வாகத்திடம் சிறப்பு அனுமதி கோரி இருந்தது.

இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த குர்கான் மாவட்ட நிர்வாகம், மானேசரில் உள்ள மாருதி கார் ஆலையில் உற்பத்தியை துவங்குவதற்கு நிபந்தனைகளுடன் நேற்று அனுமதி அளித்தது. அதாவது, 600 பணியாளர்களுடன் ஒரே ஷிஃப்டில் கார் உற்பத்தி செய்யலாம்.

கார் உற்பத்திப் பணியின்போது சமூக இடைவெளியை பணியாளர்கள் கடைபிடிக்க வேண்டும். அவர்களுக்கு போதிய பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். இல்லையெனில், ஆலையிலேயே தொழிலாளர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் கொடுக்கப்பட்டு இருந்தன.

ஏற்கனவே, மாருதியின் குர்கான் மற்றும் மானேசர் ஆலைகளின் வாயில் பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் வசதி கொண்ட பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், மானேசரில் உள்ள மாருதி ஆலையில் கார் உற்பத்தி மீண்டும் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சிறப்பு அனுமதி கிடைத்த நிலையிலும் மாருதி கார் நிறுவனம் திடீரென கார் உற்பத்தியை துவங்கும் முடிவிலிருந்து பின்வாங்கி இருக்கிறது. இதுதொடர்பாக, பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு மாருதி தலைவர் ஆர்.சி.பர்கவா அளித்துள்ள பேட்டியில் இந்த முடிவை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,"இந்த தருணத்தில் கார் உற்பத்தியை துவங்குவது உசிதமாக இருக்காது என்று கருதுகிறோம். ஊரடங்கு விலக்கப்பட்ட பின்னர் கார் விற்பனை துவங்கிய உடன் உற்பத்தியை துவங்குவதும்; தொடர்ந்து உற்பத்தி செய்தால் மட்டுமே சிறந்ததாக இருக்கும்," என்றும் தெரிவித்துள்ளார்.

மாருதி கார் நிறுவனத்தின் குர்கான் ஆலை நகர எல்லைக்கு உட்பட்ட பகுதியிலும், மானேசர் ஆலை நகர எல்லைக்கு வெளியிலும் உள்ளன. எனவேதான், மானேசர் ஆலையில் கார் உற்பத்தியை துவங்குவதற்கு குர்கான் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது.

இந்த நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக வெளியானத் தகவலால், கார் ஷோரூம்கள் தொடர்ந்து மூடப்படும் வாய்ப்புள்ளது. இதனால், கார் உற்பத்தி செய்தாலும் அதனை விற்பனை செய்ய இயலாமல், இருப்பில் வைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். இதனை மனதில் வைத்து ஊரடங்கு உத்தரவு விலக்கப்படுவதற்கான அறிவிப்பு வந்த பின் கார் உற்பத்தியை துவங்க மாருதி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications








