கொரோனா சிகிச்சைக்காக வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யப்போகும் மாருதி கார் நிறுவனம்!
கொரோனா பாதித்தவர்களின் சிகிச்சைக்காக வென்டிலேட்டர் உற்பத்தியை துவங்க இருக்கிறது மாருதி சுஸுகி.

கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாதித்தோர் எண்ணிக்கை சமூக பரவலாக மாறிவிட்டால், அது பெரும் பிரச்னையாக மாறும் வாய்ப்பு இருக்கிறது. இதனை மனதில் வைத்து பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

மேலும், வென்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் மிக அதிக அளவில் தேவைப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு தக்கவாறு, அரசுக்கு உதவும் வகையில் கார் நிறுவனங்கள் வெண்டிலேட்டர், மாஸ்க் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

அந்த வகையில், மத்திய அரசு கேட்டுகொண்டதன் அடிப்படையில் நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகி, வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்ய இருக்கிறது. அக்வா ஹெல்த்கேர் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இணைந்து வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்ய இருக்கிறது.

மாதத்திற்கு 10,000 வென்டிலேட்டர்கள் என்ற உற்பத்தி இலக்கையும் மாருதி சுஸுகி நிர்ணயித்துள்ளது. வென்டிலேட்டர்களை தயாரிப்பதற்கான கட்டமைப்பை மேம்படுத்தும் முயற்சிகளிலும் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

அதிக அளவில் வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்வதற்கான உற்பத்திப் பிரிவு, நிதி ஆதாரம், தேவையான அரசு அனுமதி உள்ளிட்டவற்றை பெறுவதற்கான முயற்சிகளையும் தொடர்ந்து எடுக்க இருப்பதாக மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.

மேலும், தனது உதிரிபாகங்கள் சப்ளையர்களின் மூலமாக மாஸ்க் உள்ளிட்ட இதர மருத்துவ பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை தயாரித்து வழங்கவும் மாருதி சுஸுகி திட்டமிட்டுள்ளது. 2 லட்சம் மாஸ்க்குகளை இலவசமாக வழங்குவதற்கு மாருதி சுஸுகி முடிவு செய்துள்ளது.

கார்களுக்கு சீட் கவர் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கூட்டணி நிறுவனமான பாரத் சீட்ஸ் லிமிடேட் மூலமாக மருத்துவ பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உடுப்புகளையும் தயாரித்து கொடுக்க இருக்கிறது.
மாருதி சுஸுகி நிறுவனம் போன்றே, மஹிந்திரா நிறுவனமும் வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்து தர உள்ளது. இதற்கான மாதிரி மாடலையும் உருவாக்கி தீவிர சோதனைகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications







