கொரோனா எஃபெக்ட்... கார் குத்தகைக்கு விடும் தொழிலில் இறங்க மாருதி திட்டம்!
கொரோனா பிரச்னையால் கார்களை குத்தகை விடும் தொழிலில் இறங்குவதற்கான வாய்ப்புகள் குறித்து மாருதி பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கொரோனா பிரச்னையால் ஆட்டோமொபைல் துறையின் பொருளாதாரம் தடம்புரண்டு நிற்கிறது. இதிலிருந்து எவ்வாறு மீண்டு வருவதற்கான வழிமுறைகளை அனைத்து வாகன உற்பத்தி நிறுவனங்களுமே தீவிரமாக பரிசீலித்து வருகின்றன.

வீட்டில் முடங்கி இருக்கும் வாடிக்கையாளர்களை உசுப்பேற்றி, கவரும் வகையில் எளிய கார் திட்டங்கள் மற்றும் சேமிப்புச் சலுகைகளை கார் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன. ஆனால், அவற்றிற்கு எந்த அளவு பயன் இருக்கும் என்று தெரியவில்லை.

இந்த சூழலில், கார் விற்பனை பாதித்துள்ளதால், டீலர்களும் நிலைகுலைந்து போயுள்ளனர். இவற்றை மனதில் வைத்து, கார் குத்தகை அடிப்படையில் வாடகைக்கு விடும் தொழிலில் இறங்குவது குறித்து மாருதி கார் நிறுவனம் பரிசீலித்து வருவதாக லைவ் மிண்ட் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

கார்களை மாதாந்திர அல்லது வருடாந்திர அடிப்படையில் குத்தகைக்கு விடும் தொழில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பல ஆண்டு காலமாக இருந்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த திட்டத்தை இந்தியாவிலும் சில கார் நிறுவனங்களும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் வழங்கி வருகின்றன.

ஹூண்டாய் மோட்டார்ஸ், மஹிந்திரா ஆகிய கார் நிறுவனங்களும், பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளிட்ட சொகுசு கார் நிறுவனங்களும் ஏற்கனவே இந்த திட்டத்தை வழங்கி வருகின்றன. ஸூம், ரெவ் உள்ளிட்ட ஸ்டார்ட் அப் வாடகை கார் நிறுவனங்களும் இந்த திட்டத்தை சில ஆண்டுகளாக நடைமுறையில் வைத்துள்ளன.

புதிய கார்களை வாங்குவதற்கான டவுன்பேமண்ட், காப்பீடு, வாகனத்தை சர்வீஸ் செய்வதற்கான செலவுகள் தவிர்க்கப்படுவதுடன், மாதத் தவணைக்கு இணையான வாடகையில் மாதாந்திர அல்லது வருடாந்திர அடிப்படையில் புதிய கார்கள் குத்தகைக்கு கிடைக்கும் என்பதால், வாடிக்கையாளர்களும் தற்போது இந்த குத்தகை திட்டங்கள் பக்கம் கவனத்தை திருப்பி உள்ளனர்.

தனிநபர் வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி, பணியாளர்களுக்கான போக்குவரத்து தேவைக்கும் இந்த திட்டங்களை சில கார்ப்பரேட் நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. இதனால், இந்த திட்டம் மெல்ல இந்தியாவில் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், மாருதி நிறுவனமும் இந்த குத்தகை அடிப்படையில் கார்களை வாடகைக்கு விடும் தொழிலை கையில் எடுக்க உள்ளதாக அந்த செய்தி குறிப்பிடுகிறது. இதன்மூலமாக, டீலர்களுக்கு கூடுதல் வருவாய் கிடைக்க வழிவகை ஏற்படும் என்பதுடன், உற்பத்தியாகும் கார்கள் அதிக அளவில் தேங்குவதை தவிர்க்க வாய்ப்பு ஏற்படும் என்று மாருதி கருதுகிறது.

இதுகுறித்து மாருதி நிறுவனத்தின் சிறப்பு வர்த்தகப் பிரிவை சேர்ந்த குழுவினர் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் லைவ்மிண்ட் தள செய்தி கூறுகிறது. விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications







