குர்கான் கார் ஆலையை வேறு இடத்திற்கு மாற்ற மாருதி முடிவு... புதிய இடத்தை தேர்வு செய்யும் பணி தீவிரம்
போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்கள், குர்கான் ஆலையை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு மாருதி கார் நிறுவனம் முடிவு செய்துள்ளது. புதிய ஆலைக்கான இடத்தை தேர்வு செய்வதிலும் தீவிரம் காட்டி வருகிறது.

நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமாக மாருதி சுஸுகி விளங்குகிரது. இந்நிறுவனத்திற்கு ஹரியானா மாநிலம் குர்கான் மற்றும் மானேசர் ஆகிய இடங்களில் கார் உற்பத்தி ஆலைகள் உள்ளன. மேலும், குஜராத் மாநிலத்தில் மாருதியின் தாய் நிறுவனமான சுஸுகி நேரடியாக ஒரு ஆலையை அமைத்து மாருதிக்கு கார் உற்பத்தி செய்து கொடுத்து வருகிறது.

இந்த சூழலில், குர்கான் நகரில் உள்ள மாருதி கார் ஆலை நகரப் பகுதியில் அமைந்துள்ளது. 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஆலை அமைக்கப்பட்டு 39 ஆண்டுகள் ஆகும் நிலையில், ஆண்டுக்கு 7 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய முடியும். தற்போது ஆலை அமைந்துள்ள பகுதியானது பெரும் மக்கள் தொகை பெருக்கமும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

கடந்த தசாப்தத்தில் குர்கான் நகரில் முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் தங்களது அலுவலகங்களை அமைத்ததுடன், குடியிருப்புப் பகுதிகளுடன் பெரும் விரிவாக்கம் கண்டுள்ளது. இதனால், கார் ஆலைக்கு வரும் நீண்ட டிரக்குகள் மற்றும் பணியாளர்கள் போக்குவரத்தில் அதிக சிரமம் ஏற்பட்டுள்ளது. விரிவாக்கம் செய்வதிலும் அதிக சிக்கல்கள் உள்ளன.

இதையடுத்து, குர்கான் கார் ஆலையை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு மாருதி கார் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதேநேரத்தில், ஹரியானா மாநிலத்திலேயே புதிய ஆலையை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது.

இதற்காக, ஹரியானா மாநில அரசுடன் மாருதி சுஸுகி நிறுவனம் பேச்சு நடத்தி வருகிறது. மேலும், எதிர்கால தேவையை மனதில் வைத்து, புதிய கார் ஆலையை 700 முதல் 1000 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிதாக அமைக்கவும் திட்டமிட்டுள்ளது.

மாருதி கார் நிறுவனத்திற்கான புதிய ஆலை அமைப்பதற்காக தற்போது மற்றொரு ஆலை அமைந்துள்ள மானேசரிலும், தவிர்த்து சோன்ஹா மற்றும் சோனிபத்தில் உள்ள கர்கோடா ஆகிய மூன்று இடங்களை ஹரியானா அரசு காட்டி இருக்கிறது. இதில், கர்கோடா பகுதியில் மாருதி எதிர்பார்க்கும் அளவுக்கு நிலம் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இதுதொடர்பாக, மாருதி கார் நிறுவனம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. சோன்ஹா பகுதியில் எடுக்கப்பட்ட மண் பரிசோதனையில் கார் ஆலை அமைப்பதற்கு போதுமான தரத்தை அந்த மண் பெற்றிருக்கவில்லை என தெரிகிறது. எனவே, மானேசர் அல்லது கர்கோடாவில் புதிய ஆலையை அமைப்பது குறித்து மாருதி விரைவில் முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டைம்ஸ் ஆஃப் இந்தியா தளத்தில் வெளியான செய்தியை ஆதாரமாக வைத்து எழுதப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








