கார் விற்பனை அதிகரிக்க வாய்ப்பு... உற்பத்தியை துவங்க மாருதி ஆயத்தம்!
கொரோனாவால் எழுந்துள்ள சூழ்நிலையால் கார் விற்பனை எகிடுதகிடாக அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால், உற்பத்தியை மீண்டும் துவங்குவதற்கான முயற்சிகளை மாருதி கையில் எடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்புகளை தொடர்ந்து தேசிய ஊரடங்கு அமலில் உள்ளது. ஏற்கனவே 21 நாட்கள் தேசிய ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், நாளை முதல் வரும் மே 3ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.
ARE YOU ON INSTAGRAM? FOLLOW TAMIL DRIVESPARK ON INSTAGRAM - CLICK HERE!

இந்த சூழலில், கார் உள்ளிட்ட வாகன உற்பத்தி நிறுவனங்களும், டீலர்களும் பெரிய அளவிலான பொருளாதார பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். நிறுவனங்களுக்கு மட்டுமின்றி, அதில் பணியாற்றுபவர்களும் பெரிய இன்னல்களை சந்திக்க நேரிடும் வாய்ப்புள்ளது.

இந்த சூழலில், வாகன உற்பத்தி உள்பட 16 விதமான தொழிற்துறகளில் உற்பத்திப் பணிகள் துவங்குவதற்கு நிபந்தனையுடன் அனுமதி அளிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகத்துக்கு மத்திய உள்நாட்டு வணிக மேம்பாட்டுத் துறை கடிதம் அனுப்பி இருக்கிறது. இந்த கடிதத்தை மத்திய உள்துறை அமைச்சகம் பரீசிலித்து உரிய வழிகாட்டுதல்களுடன் கார் உற்பத்தியை துவங்க அனுமதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான வழிகாட்டு முறைகள் நாளை வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்புடன் கார் உள்ளிட்ட வாகன உற்பத்தி நிறுவனங்கள் காத்திருக்கின்றன. எனினும், தேவை குறைவாக இருக்கும் என்பதால், குறைந்த எண்ணிக்கையில் உற்பத்திப் பணிகளை துவங்கவும், படிப்படியாக அதிகரிக்கவும் கார் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகியும் நாளை உற்பத்தியை துவங்குவதற்கான ஆயத்தத்தில் உள்ளதாக சிஎன்பிஎஸ்சி டிவி18 வெளியிட்டுள்ள தகவல் தெரிவிக்கிறது. இந்த நிலையில், தேசிய ஊரடங்கு முடிந்த பின்னர் பெரும் இழப்பை சந்தித்த கார் நிறுவனங்கள் மெல்ல எழுந்து வரும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.

அதன்படி, கொரோனா பிரச்னையால் பொது போக்குவரத்து அல்லது டாக்சி வாகனங்களில் செல்வதை பலர் தவிர்க்க விரும்புவர். மேலும், கொரோனா பரவும் அச்சத்தால், அவர்கள் சொந்த வாகனத்தில் செல்வதையே நம்பகமாக கருதுவர்.

மேலும், கொரோனா பிரச்னையை தவிர்ப்பதற்கு சமூக இடைவெளி என்பது முக்கிய விஷயமாகவும், பொதுவான வழக்கமாகவும் மக்களிடையே மாறும்.

இதனால், ஊரடங்கு தளர்த்தப்படும்போது, கார் விற்பனை மிக வேகமாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. சாதாரண காலத்தைவிட ஊரடங்கு தளர்த்தப்படும்போது, முன்பதிவு எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கருத்தை ஆய்வு நிறுவனம் ஒன்றும் கடந்த மாதம் வெளியிட்டது. சீனாவில் சார்ஸ் வைரஸ் பரவியபோதும் இதேபோன்ற நிலை ஏற்பட்டதாகவும், அப்போது பொது போக்குவரத்தை மக்கள் தவிர்த்ததுடன், புதிய கார்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். இதனால், எப்போதும் இல்லாத அளவுக்கு கார் விற்பனை அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

கொரோனா கட்டுக்குள் வந்தால், வரும் ஜூன் மாதத்திற்கு பிறகு இந்தியாவில் கார் விற்பனையில் பெரிய அளவிலான முன்னேற்றம் ஏற்படும் என்று கார் நிறுவனங்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றன. எனவே, ஊரடங்கு காலத்தில் விலக்கு அளிக்கும் அறிவிப்பை கார் நிறுவனங்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications








