அதிகரிக்கும் கொரோனா வேகம்... கார் உற்பத்தி பாதிப்பை தவிர்க்க மாருதி புதிய முயற்சி!
கொரோனா அதிகரித்து வருவதையடுத்து, கார் உற்பத்தி பணிகள் பாதிக்கப்படுவதை தவிர்ப்பதற்கான முயற்சிகளில் மாருதி சுஸுகி இறங்கி இருக்கிறது. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பிரச்னை இந்திய பொருளாதாரத்தை வெகுவாக சீரழித்து வருகிறது. உயிரிழப்புகள் கணிசமாக ஏற்படுத்தி வருவதுடன், லட்சக்கணக்கானோர் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தொழில்துறையும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. குறிப்பாக, ஆட்டோமொபைல் துறையின் வருவாய் பெரிய அளவில் இழப்பை சந்தித்து வருகிறது.

கடந்த மாதம் முதல் இழப்பிலிருந்து மீண்டு வருவதற்கான முயற்சிகளை வாகன நிறுவனங்கள் எடுத்து வருகின்றன. ஆனால், அது சீரடைவதற்கு பல மாதங்கள் பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நம் நாட்டில் கொரோனா வேகம் குறையும் என்று எதிர்பார்த்த நிலையில், மாறாக வேகமாக அதிகரித்து வருகிறது.

இது மக்களையும், தொழில்துறையினரையும் பெரும் கவலையில் ஆழ்த்தி உள்ளது. மீண்டும் ஊரடங்கில் அதிக கட்டுப்பாடுகளை விதிக்கும் நிலைக்கு மத்திய, மாநில அரசுகள் தள்ளப்பட்டுள்ளன. சென்னை உள்ளிட்ட நகரங்களில் ஊரடங்கு விதிகள் மீண்டும் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் வேகம் காட்டி வருவதால், இரண்டாவது அலை வீசும் அபாயமும் இந்தியாவில் உள்ளது. இதனை மனதில் வைத்து கட்டுப்பாடுகளை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்யும் வாய்ப்புள்ளது. இதனை மனதில் வைத்து, உதிரிபாகங்களை அதிக அளவில் இருப்பு வைக்குமாறு மாருதி சுஸுகி கேட்டுக் கொண்டுள்ளதாக லைவ்மின்ட் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வேகம் அதிகரித்துள்ளதால், இங்குள்ள சப்ளையர்களிடம் இருந்து சில உதிரிபாகங்களை பெறுவதில் மாருதி சுஸுகிக்கு சிக்கல் எழுந்துள்ளது. இதே நிலை நாட்டின் பிற பகுதிகளில் செயல்படும் பிற சப்ளையர்களிடம் இருந்தும் வரும் வாய்ப்புள்ளது. இதனை மனதில் வைத்து மாருதி இந்த அறிவுறுத்தலை வழங்கி உள்ளதாக கருதப்படுகிறது.

இதன்மூலமாக, கொரோனா வேகம் அதிகரித்தாலும், கட்டுக்குள் வந்து மீண்டும் அதிகரித்தாலும் கார் உற்பத்தியை ஓரளவு சீராக கொண்டு செல்ல உதவும் என்ற அந்த நிறுவனம் கருதுகிறது. முன்பை போல இயல்பான உற்பத்தி எண்ணிக்கையை தொடுவதற்கு வாய்ப்பு குறைந்தாலும், ஓரளவுக்கு விற்பனையை தக்க வைப்பதற்கான வாய்ப்பை இது வழங்கும்.

கடந்த மாதம் 12ந் தேதி ஹரியானா மாநிலம் மானேசரில் உள்ள மாருதி ஆலை திறக்கப்பட்டு மீண்டும் உற்பத்தி குறைவான அளவில் துவங்கப்பட்டது. அதன் பிறகு குஜராத்தில் சுஸுகி நிறுவனத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் ஆலையிலும் மாருதி கார்கள் உற்பத்தி மீண்டும் துவங்கியது. இந்த நிலையில், மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டால், உதிரிபாகங்களை போதிய அளவு இருப்பு வைக்கும் முயற்சிகளிலும் மாருதி ஈடுபட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








