மாருதி கார்களுக்கு குத்தகை திட்டம் அறிமுகம்... முழு விபரம்
புதிய மாருதி கார்களை குத்தகை அடிப்படையில் எடுத்து ஓட்டுவதற்கான நீண்ட கால வாடகை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. எந்தெந்த கார்களை இந்த திட்டத்தின் கீழ் பெறலாம், எவ்வளவு ஆண்டுகள் வரை வாடகைக்கு எடுக்க முடியும், நிபந்தனைகள் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

கொரோனா பிரச்னையால் கார் விற்பனை கடுமையாக சரிந்துவிட்டது. இதிலிருந்து மீண்டு வருவதற்கான முயற்சிகளில் வாகன நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகி பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில், தனது புதிய கார்களை நீண்ட கால வாடகைக்கு விடும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

ஜப்பானை சேர்ந்த ஓரிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த குத்தகை திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தில் முன்பணம், இன்ஸ்யூரன்ஸ், பராமரிப்பு செலவு உள்ளிட்ட பிரச்னைகள் இருக்காது. அனைத்தையும் ஓரிக்ஸ் நிறுவனம் பார்த்துக் கொள்ளும்.

அதேநேரத்தில், டவுன்பேமண்ட் செலுத்தி கார் கடனை பெற்று மாதம் தோறும் தவணையாக செலுத்தி அடைப்பதற்கு பதிலாக, ஒரு குறிப்பிட்ட மாதாந்திர கட்டணத்தை செலுத்தினால் போதுமானது. புதிய மாருதி கார்களுக்கு 24 மாதங்கள், 36 மாதங்கள் மற்றும் 48 மாதங்கள் கொண்ட குத்தகை திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இதில் பொருத்தமான திட்டத்தை தேர்வு செய்து கொண்டால், புதிய மாருதி காரை முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்து 15 தினங்களுக்குள் மாருதி காரை குத்தகைக்கு எடுத்துக் கொள்ள முடியம். அதேநேரத்தில், ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள மாதங்களுக்கு பின்னர் காரை ஒப்படைக்கலாம். அல்லது ஒபந்தம் காலாவதியாவதற்கு 30 நாட்களுக்கு முன்னர் புதுப்பிப்பதற்கான வழி வகையும் உண்டு.

மேலும், ஒப்பந்த காலத்திற்கு முன்னதாக காரை ஒப்படைக்க நேர்ந்தால், ஒப்பந்த காலத்திற்கு உரிய அனைத்து மாதாந்திர கட்டணத்தையும், கூடுதல் கட்டணத்தையும் செலுத்த வேண்டி இருக்கும். ஒப்பந்த காலம் முடிந்த பின்னர் காரை ஒப்படைத்தால் 1 முதல் 3 மாதங்களுக்கான மாதாந்திர கட்டணத்தை கூடுதலாக செலுத்த வேண்டி இருக்கும்.

அதேபோன்று, ஒப்பந்தம் செய்யப்படும் கார்களை குறிப்பிட்ட மாதங்களுக்கு பின்னரே திரும்ப வழங்க முடியும். அதாவது, 24 மாதங்களுக்கு ஒப்பந்தம் செய்தால், 12 மாதங்கள் வரை லாக் இன் பீரியட் இருக்கும். 36 மாதங்களுக்கு 18 மாதங்கள் வரையிலும், 48 மாதத் திட்டத்திற்கு 24 மாதங்களும் லாக் இன் பீரியடாக கருதப்படும்.

மாருதி அரேனா ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்படும் ஸ்விஃப்ட், டிசையர், பிரெஸ்ஸா, எர்டிகா கார்களுக்கு குத்தகை திட்டத்தில் எடுக்கலாம். நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக பலேனோ, சியாஸ் மற்றும் எக்ஸ்எல்-6 ஆகிய கார்களை குத்தகைக்கு எடுக்கலாம்.

இந்த திட்டத்தில் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்6 தரத்திற்கு இணையான புதிய கார்கள் வழங்கப்படும் என்று மாருதி தெரிவித்துள்ளது. முதல்கட்டமாக பெங்களூர், குர்கான் நகரங்களில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. இதைத்தொடர்ந்து, நாட்டின் பிற முக்கிய நகரங்களிலும் இந்த திட்டம் கொண்டு வரப்படும். மேலும், இது பரீட்சார்த்த முறையில் அறிமுகம் செய்யப்படுவதால், வரவேற்பை பொறுத்து விரிவுப்படுத்தப்படும்.


Click it and Unblock the Notifications







