கொரோனா கொடுத்த அடுத்த ஷாக்... கடும் நெருக்கடியில் மாருதி கார் நிறுவனம்!
கொரோனாவால் மூடப்பட்டு இருந்த மாருதி சுஸுகி ஆலை மீண்டும் திறக்கப்பட்டு ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், அந்நிறுவனம் உற்பத்தியை தொடர்வதில் அடுத்த சிக்கல் எழுந்துள்ளது.

கொரோனா பிரச்னையால் கடந்த ஒன்றைரை மாதத்திற்கு மேலாக மாருதி கார் ஆலைகள் மூடப்பட்டு இருந்தது. ஊரடங்கு விதிகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து, அந்நிறுவனத்தின் மானேசர் ஆலையில், கடந்த வாரம் முதல் உற்பத்தி துவங்கப்பட்டது. சமூக இடைவெளியை பின்பற்றி குறைவான பணியாளர்களுடன் உற்பத்தி நடந்து வருகிறது.

இந்த நிலையில், அங்கு பணியாற்றும் தொழிலாளர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்றுமுன்தினம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு உள்ளான அந்த மாருதி தொழிலாளர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
MOST READ: பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

கடந்த 15ந் தேதி வரை அவர் மாருதியின் மானேசர் ஆலையில் பணிக்கு வந்துள்ளார். அதன் பிறகு அவரது குடியிருப்புப் பகுதியானது கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டதால், வீட்டில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மானேசர் ஆலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவருடன் உடன் பணியாற்றியவர்கள், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்புக்கு உள்ளான மாருதியின் மானேசர் ஆலையில் கிருமி நாசினி மூலமாக சுத்தப்படுத்தும் பணிகளும் நடந்து வருகின்றன. அங்கு பணியாற்றிய தொழிலாளிக்கு கொரோனா பாதிப்பு இருப்பதால், அவருடன் பணியாற்றியவர்களுக்கும் கலக்கத்தில் உள்ளனர்.

மேலும், அந்த ஆலையில் கொரோனா தடுப்புக்காக பல்வேறு வழிகாட்டு முறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. கிருமி நாசினி மூலமும் சுத்தம் செய்யப்பட்ட பின்னரே ஊழியர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தினசரி ஊழியர்களுக்கு உடல் வெப்ப நிலை பரிசோதனைகள் செய்யப்பட்ட பின்னரே ஆலைக்குள் பணிக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த சூழலில், ஒன்றரை மாதத்திற்கு மேலாக உற்பத்தி இல்லாமல் பெரும் இழப்பை சந்தித்த மாருதி நிறுவனத்திற்கு, ஊழியருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது அடுத்த சிக்கலையும், அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.

பல ஆயிரம் பேர் பணியாற்றும் மாருதி கார் ஆலையில் கொரோனா பிரச்னையால் பெரும் இழப்புகளை தொடர்ந்து கொடுத்து வருவது பணியாளர்களுக்கும், நிர்வாகத்திற்கும் கவலையை தந்துள்ளது. இருப்பினும், ஊழியருக்கு கொரோனா பாதிப்பால் எந்த பிரச்னையும் ஏற்படாது என்று கருதுவதாக மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








