கார்களுக்கு வாரண்டியை நீட்டித்த கையொடு சில எளிய டிப்ஸ்களையும் வழங்கிய மாருதி
கொரோனா வைரஸ் பிரச்னையால், கார்களுக்கான வாரண்டி காலத்தை நீடித்து அறிவித்துள்ளது மாருதி கார் நிறுவனம். அத்துடன் சில டிப்ஸ்களையும் தனது கார் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி இருக்கிறது.

கொரோனா பிரச்னையால் தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, கார் ஆலைகளும், டீலர்களும் மூடப்பட்டுள்ளன. இதனால், கார் பராமரிப்புப் பணிகளை சரியான இடைவெளியில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போதைய சூழலை மனதில் வைத்து, கார் நிறுவனங்கள் வாரண்டி காலம் மற்றும் ஏஎம்சி எனப்படும் ஆண்டு பராமரிப்புத் திட்டங்களுக்கு கால நீடிப்பு வழங்கி வருகின்றன. டாடா மோட்டார்ஸ், கியா மோட்டார்ஸ் நிறுவனங்கள் வாரண்டி காலத்திற்கு நீடிப்பு வழங்கி இருக்கின்றன.

அந்த வகையில், தற்போது நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகியும் வாரண்டி காலம் நீடிப்பு மற்றும் இலவச சர்வீஸ் காலத்தை நீடித்துள்ளது. அதாவது, மார்ச் 15 முதல் ஏப்ரல் 30 வரையிலான காலக்கட்டத்தில் வாரண்டி முடிவடைந்தால், அதனை வரும் ஜூன் 30 வரை பயன்படுத்திக் கொள்வதற்கான கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சில டிப்ஸ்களையும் வழங்கி இருக்கிறது மாருதி கார் நிறுவனம். ஒரே இடத்தில் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டு இருக்கும் கார்களை அவ்வப்போது எஞ்சினை ஸ்டார்ட் செய்து 15 நிமிடங்கள் ஐட்லிங்கில் வைத்து ஓட விட வேண்டும் என்று தனது வாடிக்கையாளர்களை அறிவுறுத்தி உள்ளது மாருதி நிறுவனம்.

இதன்மூலமாக, பேட்டரியில் சார்ஜ் முற்றிலுமாக தீர்ந்து போவது தவிர்க்கப்படும். அத்துடன், காரை சிறிது முன்னும், பின்னும் நகர்த்தி நிறுத்துவதும் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக, டயர் பாதிப்பு மற்றும் காற்றழுத்தம் குறைவு போன்ற பிரச்னைகள் தவிர்க்கப்படும்.

ஸ்மார்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்ட கார்களை வைத்திருப்போரும், லித்தியம் அயான் பேட்டரி உள்ள தனது கார்களிலும் அரைமணி நேரம் கார் எஞ்சினை ஓட விடுவதுடன், ஹெட்லைட்டையும் சிறிது நேரம் எரிய விட்டு வைத்து பின்னர் அணைப்பது பிரச்னைகள் வராமல் தவிர்க்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், ஹேண்ட் பிரேக்கில் வைத்து காரை நிறுத்தாமல், கல் அல்லது மரத்துண்டுகளை டயர்களுக்கு முன்னும் பின்னும் வைத்து நிறுத்தி வைப்பது பலன் தரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த வழிமுறைகளை பின்பற்றி காரை பாதுகாத்துக் கொள்ளுமாறு மாருதி சுஸுகி கேட்டுக்கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








