கார் உற்பத்தியை மீண்டும் துவங்குவதற்கு மாருதிக்கு சிறப்பு அனுமதி!
நிபந்தனைகளுடன் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார் ஆலையில் உற்பத்திப் பணிகள் துவங்குவதற்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமாக செயல்பட்டு வரும் மாருதி கார் நிறுவனத்திற்கு ஹரியானா மாநிலம் குர்கான் மற்றும் மானேசர் ஆகிய இடங்களில் கார் ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில், கார்கள் மற்றும் கார்களுக்கான தேவையான எஞ்சின்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக, தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனால், கடந்த மாத பிற்பாதியில் இருந்து மாருதியின் கார் ஆலைகளில் உற்பத்திப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.

நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான கார்களை உற்பத்தி செய்யும் இந்த ஆலைகளில் உற்பத்தி அடியோடு முடங்கியது. இதனால், அந்நிறுவனத்திற்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும், இந்த ஆலைகளில் பணிபுரிந்து வந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் மறைமுகமாக வேலைவாய்ப்பை பெற்று வந்தவர்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

இந்த சூழலில், கடந்த 15ந் தேதி முதல் வரும் 3ந் தேதி முதல் இரண்டாம் கட்ட ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டுள்ளதால், பல்லாயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, மாருதி கார் நிறுவனமும் பெரும் இழப்பை தொடர்ந்து சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் முதல் கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத பகுதிகளில் உள்ள ஆலைகள் நிபந்தனைகளுடன் செயல்படுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இதற்காக, சிறப்பு அனுமதி பெற வேண்டியதும் அவசியம்.

இந்த சூழலில், குர்கான் மாவட்ட நிர்வாகத்திடம் மாருதி கார் நிறுவனம் தனது கார் ஆலைகளில் உற்பத்திப் பணிகளை துவங்குவதற்கு அனுமதிக்க விண்ணப்பம் அளித்திருந்தது. இதனை பரிசீலித்த அம்மாவட்ட நிர்வாகம், சிறப்பு அனுமதியை வழங்கி இருக்கிறது. டீம் பிஎச்பி தள உறுப்பினர் மூலமாக இந்த தகவல் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.

இதன்மூலமாக, அரசு வழிகாட்டுதல்கள் மற்றும் நிபந்தனைகளுடன் மாருதி கார் ஆலைகளில் உற்பத்திப் பணிகள் மீண்டும் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மாருதி கார் நிறுவனத்திற்கும், அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

ஆனால், ஒரே ஷிஃப்ட் முறையில் 600 பேர் மட்டுமே பணியில் ஈடுபடுத்துவதற்கு நிபந்தனையுடன் அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. தொழிலாளர்கள் முறையான பாதுகாப்பு முறைகள் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றி பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

மேலும், ஆலைக்கு வரும் தொழிலாளர்களுக்கு பரிசோதனைகள் செய்த பின் அனுமதிப்பது, பணி இடத்தில் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

மேலும், தொழிலாளர்கள் ஆலைக்கு வந்து செல்வதற்கான போக்குவரத்து வசதி அல்லது ஆலையிலேயே அவர்கள் தங்குவதற்கான ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று அம்மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறது.

இதனிடையே, மாருதி கார் நிறுவனம் தனது மானேசர் ஆலையில் உற்பத்தியை துவங்கும் விதத்தில், பணிக்கு வரும் தொழிலாளர்கள் மீது கிருமி நாசினி தெளிக்கும் சுரங்கப் பாதை அமைப்பை உருவாக்கி இருக்கிறது. இதனால், மாருதியின் மானேசர் கார் ஆலையில் மீண்டும் உற்பத்திப் பணிகள் துவங்கப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது.


Click it and Unblock the Notifications








