வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு வெகுமதி திட்டத்தை அறிவித்தது மாருதி
கொரோனா பாதிப்பிலிருந்து மீளும் விதமாக சேமிப்புச் சலுகைகள், சிறப்பு கடன் திட்டங்கள் வரிசையில் தற்போது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு வெகுமதி திட்டத்தை மாருதி அறிவித்துள்ளது.

கொரோனாவால் கடந்த மார்ச் இறுதியிலிருந்து மே மாதம் வரை கார் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதிலிருந்து மீண்டு வருவதற்கான கற்ற வித்தகளையும் கார் நிறுவனங்கள் போட்டுக் காட்டி வருகின்றன. சேமிப்புச் சலுகைகள், தள்ளுபடி, சிறப்பு கார் கடன் திட்டங்கள், டோர் டெலிவிரி என பல திட்டங்களை அனைத்து நிறுவனங்களுமே அறிவித்துவிட்டன.

நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகியும் இந்த வீழ்ச்சியிலிருந்து எழுந்துவிடுவதற்கான முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகிறது. தள்ளுபடி சலுகைகள், சிறப்பு கார் கடன் திட்டங்கள் வரிசையில் தற்போது சிறப்பு வெகுமதி திட்டத்தை மாருதி அறிவித்துள்ளது.

மாருதி நிறுவனத்தின் அரேனா, நெக்ஸா மற்றும் ட்ரூ வேல்யூ ஷோரூம்கள் வாயிலாக கார்களை சர்வீஸ் செய்பவர்கள், ஆக்சஸெரீகள், கூடுதல் வாரண்டி திட்டம் மற்றும் உதிரிபாகங்ளை வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இந்த வெகுமதி திட்டத்தின் கீழ் சேமிப்பை பெறும் வாய்ப்பு உள்ளது. மாருதியின் டிரைவிங் பயிற்சி பள்ளியில் பதிவு செய்வோருக்கும் இந்த திட்டத்தின் கீழ் சேமிப்பு பெறும் வாய்ப்புள்ளது.

ஏற்கனவே மாருதியின் ஆட்டோகார்டு மற்றும் மைநெக்ஸா திட்டத்தில் இணைந்துள்ள வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்திற்கு மாற முடியும். இதற்கு கூடுதல் கட்டணம் எதுவும் கிடையாது. மேலும், மாருதியின் புதிய வெகுமதி திட்டத்திற்கு தனியாக கார்டு எதுவும் வழங்கப்படாது. அனைத்துமே டிஜிட்டல் பரிவர்த்தனையாக செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு குறுந்தகவல் மூலமாக தகவல்கள் அனுப்பப்படும்.

கார் சர்வீஸ் செய்யும் கட்டணம், உதிரிபாகங்களுக்கான செலவு, ஆக்சஸெரீகள் வாங்கும் தொகைக்கு ஏற்ப புள்ளிகள் வழங்கப்படும். மீண்டும் சர்வீஸ் அல்லது உதிரிபாகங்களை வாங்கும்போது இந்த வெகுமதி திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் இதுவரை சேர்ந்துள்ள புள்ளிகளின் அடிப்படையில் கட்டணம் அல்லது விலையில் குறிப்பிட்ட சதவீதம் கழித்துக் கொள்ளப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் சேரும் வாடிக்கையாளர்கள் மெம்பர், சில்வர், கோல்டு மற்றும் பிளாட்டினம் என நான்கு வகைகளில் பிரிக்கப்பட்டு, அதற்கு தக்கவாறு கழிவு வழங்கப்படும். மேலும், வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு வெகுமதி பேட்ஜ் வழங்கப்படும். இதன் அடிப்படையில் சிறப்பு தள்ளுபடி மற்றும் ஆஃபர்களை பெறுவதற்கான வாய்ப்பை பெற முடியும்.

நாட்டிலுள்ள அனைத்து டீலர்களிலும் இந்த திட்டத்தை வாடிக்கையாளர்கள் பெற முடியும் என்று மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது. இந்த திட்டம் மாருதி சுஸுகி வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மதிப்பையும், சேமிக்கும் வாய்ப்பையும் வழங்கும் என்று கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications