மாருதி கார்களுக்கான பருவமழை கால பரிசோதனை திட்டம் அறிமுகம்
மாருதி கார்களுக்கான பருவமழை கால பரிசோதனை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

கொரோனா பிரச்னையிலிருந்து கார் வர்த்தகம் மெல்ல எழுந்து வந்து கொண்டிருக்கிறது. கடந்த மாதம் விற்பனை மீண்டும் எழுச்சிப் பெற துவங்கி இருப்பதால், கார் நிறுவனங்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சேவைகளை வழங்குவதில் கார் நிறுவனங்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. மாருதி கார் நிறுவனமும் பல சிறப்புத் திட்டங்களை அறிவித்து வருகிறது.

அந்த வகையில், பருவமழை காலத்தை முன்னிட்டு கார்களுக்கான சிறப்பு பரிசோதனை திட்டத்தை அறிவித்துள்ளது. பருவமழை காலத்தில் கார்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில், இந்த பராமரிப்பு மற்றும் பரிசோதனை திட்டம் அமைந்துள்ளது.

பருவமழை காலத்தில் கார்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அடிப்படை தேவையான விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். வைப்பர் பிளேடுகள், பிரேக் பேடுகள், பிரேக் ப்ளூயிட் அளவு, ஏசி எவோப்ரேட்டர் க்ளீனர் உள்ளிட்டவற்றை பரிசோதித்து, குறைபாடு இருந்தால் புதிய உதிரிபாகத்தை மாற்றித் தரப்படும்.

மேலும், தரமான உதிரிபாகங்கள் பயன்படுத்தப்படுவதால், கார்களின் பாதுகாப்பும், தரமும் நீடித்து உழைக்கும் வாய்ப்பை வழங்கும். இந்த சிறப்பு பராமரிப்பு திட்டத்தில் கார்களை பரிசோதனை செய்து பயன்பெறுமாறு மாருதி சுஸுகி கேட்டுக் கொண்டுள்ளது.

வரும் 31ந் தேதி வரை இந்த பருவமழை கால சிறப்பு பரிசோதனை திட்டம் அமலில் இருக்கும் என்று மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது. மாருதி கார்களுக்கான பராமரிப்பு சேவை மற்றும் உதிரிபாகங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு வெகுமதி திட்டமும் வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








