புது கார் வாங்குற பிளான் இருந்தா இப்பவே வாங்கிடுங்க... கார்களின் விலையை உயர்த்த இருப்பதாக மாருதி அறிவிப்பு!
பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி விரைவில் அதன் கார்களின் விலையை உயர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியர்களின் அதிக வரவேற்பைப் பெற்று வரும் கார் தயாரிப்பு நிறுவனங்களில் மாருதி சுசுகியும் ஒன்று. இந்த நிறுவனமே விரைவில் அதன் கார்களின் விலையை உயர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து புதன்கிழமை (நேற்று) அந்நிறுவனம் வெளியிட்ட தகவலில், "வருகின்ற ஜனவரி மாதம் முதல் கார்களின் விலையை உயர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது.

உற்பத்தி செலவு அதிகரிப்பதன் காரணத்தினாலயே விலையுயர்வை செய்ய இருப்பதாக அந்நிறுவனம் காரணம் தெரிவித்துள்ளது. புதிய பாதுகாப்பு விதி மற்றும் மாசு உமிழ்வு விதி காரணமாக வாகன உற்பத்தித்துறை அதன் தயாரிப்புகளில் பல்வேறு அப்கிரேடுகளைச் செய்யும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

இதன் விளைவாக அண்மைக் காலங்களாக புதிய வாகனங்களின் விலை கணிசமாக உயர்ந்த வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையிலேயே மாருதி சுசுகி நிறுவனம் 2021 ஜனவரி மாதத்தில் இருந்து வாகனங்களின் விலையை உயர்த்த இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கின்றது.

தற்போது மாருதி நிறுவனத்தின் முதல் ஆரம்பநிலை காராக ஆல்டோ மாடல்கள் இருக்கின்றன. இந்த கார் ரூ. 2.95 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. அடுத்த வருடம் இந்த விலை ரூ. 3 லட்சத்திற்கும் அதிகமாக உயரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேபோன்று, இந்நிறுவனத்தின்கீழ் விற்பனைக்குக் கிடைக்கும் வெவ்வேறு மாடல் கார்களும் விலையுயர்வைச் சந்திக்க இருக்கின்றன.

மிகுந்த விற்பனை வீழ்ச்சியில் இருந்து வாகன நிறுவனங்கள் தற்போதே மீள தொடங்கியிருக்கின்றன. இம்மாதிரியான சூழ்நிலையில் மாருதி சுசுகி நிறுவனம் அதன் கார்களின் விலையை உயர்த்த இருப்பது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2020 நவம்பரில் இந்த நிறுவனம் ஒட்டுமொத்தமாக 1,35,775 அலகு வாகனங்களை விற்பனைச் செய்திருந்தது. இது 2019 நவம்பரைக் காட்டிலும் 2.4 சதவீத விற்பனை வீழ்ச்சியாகும். 2019 நவம்பரில் 1,39,133 அலகு வாகனங்களை அது விற்பனைச் செய்திருந்தது. இது உள் நாட்டு சந்தை விற்பனை நிலவரம் ஆகும்.


Click it and Unblock the Notifications








