நெக்ஸா ஷோரூம் நெட்வொர்க்கை விரிவாக்க மாருதி திட்டம்... புதிய கார் மாடல்களையும் களமிறக்குகிறது!
நெக்ஸா ஷோரூம்களின் எண்ணிக்கை அதிகரிக்க மாருதி திட்டமிட்டுள்ளது. அத்துடன், புதிய கார் மாடல்களையும் நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக விற்பனைக்கு கொண்டு வருவதற்கு அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி பட்ஜெட் கார் தயாரிப்பில் சிறந்து விளங்குகிறது. இந்த நிலையில், பட்ஜெட் கார் தயாரிப்பாளர் என்ற முத்திரையால் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதில் சில சிக்கல்கள் எழுந்தன.

இதனை மனதில் வைத்து சற்றே விலை உயர்ந்த அல்லது பிரிமீயம் வசதிகள் கொண்ட கார் மாடல்களை விற்பனை செய்வதற்காக நெக்ஸா என்ற பெயரில் பிரிமீயம் ஷோரூம்களை திறந்தது.

கூடுதல் விலை கொடுத்து கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான அனுபவத்தையும், விற்பனஐக்கு பிந்தைய சேவையை வழங்கும் விதத்திலும் நெக்ஸா ஷோரூம்களின் செயல்பாடுகள் வகுக்கப்பட்டன.

வழக்கமான பட்ஜெட் மற்றும் சாதாரண வகை கார் மாடல்களை அரேனா என்ற ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், நெக்ஸா ஷோரூம்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து இருக்கிறது. தற்போது நெக்ஸா வழியாக இக்னிஸ், பலேனோ, எக்ஸ்எல்-6, சியாஸ் கார்களை விற்பனை செய்கிறது. விரைவில் பிஎஸ்-6 எஞ்சினுடன் எஸ் க்ராஸ் காரும் இணைகிறது.

இந்த நிலையில், நெக்ஸா ஷோரூம்களை திறக்கும் திட்டம் துவங்கி 5 ஆண்டுகள் ஆகின்றன. தற்போது நாடு முழுவதும் 370 மாருதி நெக்ஸா ஷோரூம்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக இதுவரை 11 லட்சம் கார்களை மாருதி விற்பனை செய்துள்ளது.

மாருதி கார் நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 20 சதவீதம் என்ற பங்களிப்பை நெக்ஸா ஷோரூம்கள் பெற்றிருக்கின்றன. நெக்ஸா ஷோரூம்களுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மாருதிக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. மேலும், நாடு முழுவதும் மூன்றாம் நிலை மற்றும் நான்காம் நிலை நகரங்களிலும் நெக்ஸா ஷோரூம்களை திறப்பதற்கு திட்டமிட்டுள்ளது.

அதேபோன்று, நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக புதிய கார் மாடல்களையும் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. புதிய எம்பிவி கார் மற்றும் ஜிம்னி எஸ்யூவி ஆகியவை நெக்ஸா வாயிலாக விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

தற்போது 2,600 அரேனா ஷோரூம்கள் மற்றும் சேவை மையங்களை மாருதி கைவசம் வைத்திருக்கிறது. அதேபோன்றே நெக்ஸாவையும் விரிவுப்படுத்த முடிவு செய்துள்ளது. இதன்மூலமாக, வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கும் வாய்ப்பை மாருதி சுஸுகி பெற முடியும். அத்துடன், நெக்ஸாவின் வர்த்தகமும் வெகுவாக வலுப்படுத்தவும் இயலும் என்று மாருதி நம்புகிறது.
ஆட்டோகார் இந்தியா தள வெளியிட்டுள்ள செய்தியின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








