2 புதிய பட்ஜெட் கார்களை தயாரிக்கும் மாருதி... ஆல்ட்டோ சகாப்தம் முடிவுக்கு வர வாய்ப்பு!
மாருதி கார் நிறுவனம் மிக குறைவான விலையிலான இரண்டு புத்தம் புதிய கார் மாடல்களை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகி பட்ஜெட் கார் மார்க்கெட்டில் மிக வலுவான சந்தையை தக்க வைத்து வருகிறது. ரூ.5 லட்சம் பட்ஜெட்டிற்குள் பல கார் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இதில், ஆல்ட்டோ, வேகன் ஆர், செலிரியோ உள்ளிட்ட மாடல்கள் மாருதி கார் நிறுவனத்திற்கு பெரும் பக்க பலமாக இருந்து வருகின்றன.

குறிப்பாக, ஆல்ட்டோ கார் மாடலானது முதல்முறையாக கார் வாங்க திட்டமிடும் இந்தியர்களுக்கு முதன்மையான தேர்வாக இருந்து வருகிறது. இந்த சூழலில், இரண்டு புதிய பட்ஜெட் கார் மாடல்களை அந்நிறுவனம் உருவாக்கி வருவது தெரிய வந்துள்ளது.

மாருதியின் புதிய பட்ஜெட் கார்கள் YOM மற்றும் YNC ஆகிய குறியீட்டுப் பெயர்களில் அழைக்கப்படுகின்றன. இந்த கார்கள் ரூ.5 லட்சம் பட்ஜெட்டிற்குள் விலை நிர்ணயிக்கும் வகையிலான அம்சங்களுடன் உருவாக்கப்படுகிறது.

இந்த புதிய கார்களில் YOM என்ற பெயரில் உருவாக்கப்பட்டு வரும் கார் ஆல்ட்டோ 800 சிசி மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்படும். அடுத்த ஆண்டு பண்டிகை காலத்தில் இந்த புதிய மாடல் எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்து YNC என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் மாடலானது செலிரியோ காருக்கு மாற்றாக வர இருக்கிறது. இந்த மாடலில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வு கொடுக்கப்படும்.

மாருதியின் புதிய YNC கார் மாடலானது இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

எஸ்யூவி கார்கள் மீதான மோகம் காரணமாக, பட்ஜெட் வகை ஹேட்ச்பேக் கார்களுக்கான மவுசு குறைந்து வருகிறது. கடந்த 2010ம் ஆண்டு இந்தியாவில் விற்பனையாகும் கார்களில் 25 சதவீதம் அளவுக்கு சிறிய வகை பட்ஜெட் கார்கள் பங்களிப்பு இருந்தன. ஆனால், தற்போது வெறும் 8 சதவீதமாக அது குறைந்து போய்விட்டது.

இருப்பினும், இந்த வகை கார் மார்க்கெட்டில் மாருதி நிறுவனத்திற்கு குறிப்பிடத்தக்க அளவு பங்களிப்பு இருப்பதால், ஆல்ட்டோ, செலிரியோ கார்களுக்கு மாற்றாக புதிய கார்களை உருவாக்கும் பணிகளில் மாருதி சுஸுகி ஈடுபட்டுள்ளது.

எஸ்யூவி வகை கார்கள் மற்றும் விலை உயர்ந்த கார்களுக்கான வரவேற்பு அதிகரித்த போதிலும், ஊரகப் பகுதிகளில் சிறிய வகை பட்ஜெட் கார்களுக்கான சந்தை வலுவாக இருப்பதாக மாருதி கருதுகிறது. எனவே, அந்த சந்தையை நோக்கி தனது வர்த்தகத்தை கொண்டு செல்ல இருக்கிறது.

புதிய மாசு விதிகள் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் வந்தாலும் கூட வாடிக்கையாளர்களுக்கு மிகச் சரியான விலையில் கார்களை வழங்குவதை நோக்கமாக கொண்டு மாருதி சுஸுகி செயல்பட்டு வருவதாக அந்நிறுவனத்தின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். எனவே, தற்போதைய ஆல்ட்டோ, செலிரியோ கார்கள் இந்த ஆண்டு இறுதியில் விடை பெறும் என்று தெரிகிறது.
Source: ET Auto


Click it and Unblock the Notifications








