சிஎன்ஜி தேர்வில் ஸ்விஃப்ட்... இன்னும் சில மாடல்களும்... பட்டைய கிளப்பும் மாருதி சுசுகி...
சிஎன்ஜி தேர்வை விரிவாக்கும் வகையில் புதிதாக கூடுதல் சில புகழ்வாய்ந்த மாடல்களையும் மாருதி சுசுகி நிறுவனம் சிஎன்ஜி மாடலில் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அடுத்தபடியாக இந்திய சாலைகளை ஆக்கிரமிக்க தயாராகிக் கொண்டிருக்கின்றது சிஎன்ஜி வாகனங்கள்.
காற்று மாசுறுதலைக் கருத்தில் கொண்டு எரிபொருளால் வாகனங்களுக்கு மாற்றாகவே சிஎன்ஜி வாகனங்கள் இந்தியாவில் களமிறக்கப்பட்டு வருகின்றது.

இவை குறைந்தளவு மாசை வெளிப்படுத்தி சுற்றுப்புறச் சூழலுக்கு நண்பனாக செயல்படும். அதேசமயம், இவை மாசு விவகாரத்தில் மட்டுமின்றி செலவு விஷயத்திலும் சிக்கனமாகவே செயல்படும். ஆம், பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களைக் காட்டிலும் சிஎன்ஜி வாகனங்களைப் பராமரிப்பது மிகவும் சுலபம். மேலும், பிற எரிபொருள் வாகனங்களைக் காட்டிலும் இதில் கூடுதல் மைலேஜைப் பெற முடியும்.

எனவேதான், தற்போது மக்கள் மத்தியில் சிஎன்ஜி வாகனங்கள் கவனம் பெறத் தொடங்கியுள்ளது. இதன் வெளிப்பாடாக வாகன உற்பத்தி நிறுவனங்கள் அதன் மிகவும் பிரபலமான மாடல்களை சிஎன்ஜி வேரியண்டில் அறிமுகம் செய்யத் தொடங்கியிருக்கின்றன. இம்மாதிரியான பணியில்தான் மாருதி சுசுகி நிறுவனமும் ஈடுபட்டு வருகின்றது.

இந்நிறுவனம், அதன் வரிசையில் பல்வேறு சிஎன்ஜி தேர்வுகளை வழங்கி வரும்நிலையில் கூடுதலாக மேலும் பல புகழ்வாய்ந்த மாடல்களை சிஎன்ஜி தேர்வில் களமிறக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, புதிதாக ஸ்விஃப்ட், டிசையர், இக்னிஸ் மற்றும் சியாஸ் ஆகிய மாடல் கார்களிலும் சிஎன்ஜி தேர்வு வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகின்றது.

ஏற்கனவே, மாருதி சுசுகி நிறுவனம் செலிரியோ, ஆல்டோ, ஈகோ, வேகன் ஆர், டூர் எஸ், எஸ் பிரஸ்ஸோ, சூப்பர் கேரி மற்றும் எர்டிகா ஆகிய மாடல்களில் சிஎன்ஜி தேர்வை வழங்கி வருவது குறிப்பிடத்தகுந்தது. இதில், கூடுதலாக புதிதாக அதன் சிறப்பு வாய்ந்த மாடல்களை இணைக்கவிருக்கின்றது.

புதிய மாசு உமிழ்வு விதி பிஎஸ்-6 காரணமாக மாருதி சுசுகி நிறுவனத்தின் விலைக் குறைந்த மற்றும் அதிக விற்பனையைப் பெறும் சிறிய எஞ்ஜின் டீசல் கார்கள் விற்பனையில் இருந்து விளக்கப்பட்டன. இது, மாருதி நிறுவனத்தின் விற்பனையை பதம் பார்க்கத் தொடங்கியுள்ளது. இதைச் சமன் செய்யும் விதமாகவே தனது சிஎன்ஜி தேர்வை விரிவுப்படுத்தும் பணியில் அந்நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.

தற்போது மக்கள் மத்தியில் பெட்ரோல், டீசல் மாற்று வாகனங்கள் மீதே ஆர்வம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனவே, அதைப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக மாருதி சுசுகி நிறுவனம் சிஎன்ஜி கார்களை அறிமுகம் செய்யத் தொடங்கியுள்ளது.

ஆகையால், தற்போது மாருதி சுசுகி நிறுவனத்தின் குறிப்பிட்ட சில மாடல்கள் மட்டுமே சிஎன்ஜி தேர்வில் கிடைக்காத மாடல்களாக இருக்கின்றன. அவை, பலினோ, எக்ஸ்எல்6 மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா ஆகியவை ஆகும். விரைவில் இந்த மாடல்களையும் மாருதி சுசுகி சிஎன்ஜி தேர்வில் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

ஏனெனில் மாருதி சுசுகி நிறுவனம், மின்சார வாகனங்களைக் காட்டிலும் சிஎன்ஜி வாகனங்களுக்குதான் அதிக முக்கியத்துவத்தை வழங்கி வருகின்றது.
அதேசமயம், இந்தியாவிலும் தற்போது விற்பனையாகும் பயணிகள் வாகனங்களின் ஒட்டுமொத்த விற்பனையில் பாதிக்கு பாதி சிஎன்ஜி வாகனங்களே இடம்பிடிக்கத் தொடங்கியுள்ளன.

ஆகையால், எதிர்காலத்தில் சிஎன்ஜி வாகனங்களுக்கான சந்தை விரிவடைந்த நிலையில் இருக்கும் என யூகிக்கப்படுகின்றது. எனவே, மாருதி சுசுகி நிறுவனம் மட்டுமின்றி ஹூண்டாய் போன்ற சில முன்னணி நிறுவனங்களும் சிஎன்ஜி வாகனங்களை அறிமுகம் செய்யும் பணியில் களமிறங்கியிருக்கின்றன.

இந்திய அரசும் பெட்ரோல், டீசல் நிலையங்களுக்கு இணையாக சிஎன்ஜி நிலையங்களை உருவாக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றது. இத்துடன், மின் வாகன விற்பனையை ஊக்குவிப்பதற்கான பணியில் அது கவனத்தைச் செலுத்தி வருகின்றது. ஆகையால், எதிர்காலத்தில் இந்தியாவின் பெரும்பாலான சாலைகளை சிஎன்ஜி மற்றும் மின் வாகனங்களே ஆளவிருக்கின்றன என்பது தெரிகின்றது.

நாடு முழுவதும் சிஎன்ஜி வாகனங்களின் விற்பனை அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்திலும் லேசான வளர்ச்சியை அவை பெற தொடங்கியுள்ளன. தற்போது பயன்பாட்டில் இருக்கும் பெருவாரியான வாடகை வாகனங்கள் சிஎன்ஜி வாகனங்களகாவே காணப்படுகின்றன. மேலும், தனி நபர் பயன்பாட்டிலும் சிஎன்ஜி வாகனங்கள் நுழையத் தொடங்கியுள்ளன. தற்போது தமிழகத்தின் முக்கிய நகரங்களில் சிஎன்ஜி தேர்வு வாகனங்கள் சுலபமாகக் கிடைக்கத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








