கொரோனா நோயாளிகளை காப்பாற்ற களமிறங்கும் மாருதி சுஸுகி!
நம் நாட்டில் கொரோனா பாதித்தவர்களை காப்பதற்கான திட்டத்தில் மாருதி சுஸுகி களமிறங்க உள்ளது. இந்த நல்லெண்ண அடிப்படையிலான முயற்சி பற்றியும், அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

உலகையே முடங்க வைத்துள்ள கொரோனாவை முடங்க வைப்பதற்கு மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் முயற்சிகளை செய்து வருகின்றனர். ஆனால், அடங்க மறுத்து அத்துமீறி வருகிறது. இந்த சூழலில், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது.

இதற்காக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. மேலும், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தாக்கம் மிக அதிகமாக இருப்பதும், கொரோனா பாதித்தவர்களை காப்பதற்கான வென்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் இல்லாததும் முக்கிய விஷயமாக தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து, முன்னெச்சரிக்கையாக மருத்துவ உபகரணங்களை தயார் நிலையில் வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இதற்காக, கார் நிறுவனங்கள் தங்களது பொறியாளர்கள் துணையுடன், தங்களது ஆலைகளில் வென்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை தயாரித்து கொடுப்பதற்கு தயாராகி வருகின்றன. அண்மையில் மஹிந்திரா நிறுவனம் முதலாவதாக இந்த திட்டத்தில் இறங்க இருப்பதாக தெரிவித்தது.

இதைத்தொடர்ந்து, நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகியும் மருத்துவ உபகரணங்களை தயாரிக்கும் திட்டத்தை கையில் எடுக்க உள்ளது தெரிய வந்துள்ளது.

கொரோனாவை எதிர்த்து போராட தேவையான சில உதவிகளை செய்து தருமாறு, கார் நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதுதொடர்பான கேள்விக்கு பதில் அளித்த மாருதி சுஸுகி தலைவர் ஆர்.சி.பர்கவா, வென்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை தயாரித்து கொடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும், இரண்டொரு நாளில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதனால், மாருதி நிறுவனத்தின் பொறியாளர்கள் வென்டிலேட்டர் உள்ளிட்ட கருவிகளை உருவாக்கி, அந்த கருவிகள் மாருதி கார் ஆலைகளில் உற்பத்தி செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. டெல்லி அருகே குர்கான் மற்றும் மானேசரில் மாருதி கார் ஆலைகள் உள்ளன.

தற்போது கார் உற்பத்தி பணிகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், கொரோனா தீவிரத்தை பொறுத்து, மருத்துவ உபகரணங்கள் தயாரித்துக் கொடுக்கும் பணிகள் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
Source: NDTV


Click it and Unblock the Notifications







