மாருதி கார் ஆலையில் பாதுகாவலர்கள் 17 பேருக்கு கொரோனா உறுதி... தலைமறைவானதால் பதட்டம்!
மாருதி கார் ஆலையில் பணிபுரிந்து வரும் 17 பாதுகாவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது. அவர்கள் தலைமறைவாக உள்ளதால், அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கொரோனா தொற்று வேகம் பன்மடங்கு அதிகரித்து வருகிறது. ஊரடங்கு போடப்பட்டும் பிரயோஜனமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. வர்த்தக ஸ்தாபனங்கள் மற்றும் தொழில்துறையினர் பாதுகாப்பு விதிமுறைகளுடன் ஆலைகளையும், அலுவலகங்களையும் திறக்க அனுமதிக்கப்பட்டனர்.

இதனால், அனைத்து தொழில் நிறுவனங்களும் செயல்பட துவங்கி உள்ளன. இந்த நிலையில், ஊரடங்கு விதி தளர்வுகளை பயன்படுத்தி கடந்த மாதம் முதல் பெரும்பாலான கார் உற்பத்தி ஆலைகள் மீண்டும் திறக்கப்பட்டு உற்பத்திப் பணிகள் நடந்து வருகின்றன.

நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு சொந்தமான ஹரியானா மாநிலம் மானேசரில் உள்ள கார் ஆலையிலும் கடந்த மாதம் முதல் உற்பத்திப் பணிகள் துவங்கப்பட்டு நடந்து வருகிறது. ஆலைக்கு வரும் பணியாளர்கள் நுழைவாயிலிலேயே வைத்து கடுமையான பரிசோதனைக்கு பின்னர் பணிக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில், கடந்த மாதம் ஆலை பணியாளர்கள் மூன்று பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதனால், உடனடியாக அங்கு உற்பத்திப் பணிகள் நிறுத்தப்பட்டு ஆலையை சுத்திகரிக்கும் பணிகள் நடந்ததுடன், அந்த தொழிலாளர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், தற்போது அங்கு பணிபுரிந்து வந்த பாதுகாவலர்கள் 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்களை தனிமைப்படுத்துவதற்காக போலீசார் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் சென்றபோது அங்கு அவர்கள் இல்லை.

ஆனால், கொரோனா உறுதியான பின்னர் அவர்கள் அங்கிருந்து தலைமறைவாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதுதொடர்பாக, மானேசர் இன்டஸ்ட்ரியல் செக்டார் 7 காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட தலைமறைவாக உள்ள 17 பேரையும் தேடும் பணி நடக்கிறது.

இதுதொடர்பாக, மாருதி சுஸுகி நிறுவனம் அளித்துள்ள தகவலில், ஆலையின் பாதுகாப்புப் பணிகளில் தனியார் பாதுகாப்பு நிறுவனம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தை சேர்ந்த 17 பேரும்தான் மானேசர் ஆலையின் பாதுகாப்புப் பணியில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஷயம் தொடர்பாக அரசு அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. எந்த தகவலும் தெரிவிக்காமல், அங்கிருந்து தலைமுறைவானர்களை தேடும் பணியில் சுகாதாரத் துறையினரும், போலீசாரும் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், ஆலையில் உற்பத்திப் பணிகளில் எதுவும் பாதிப்பில்லை என்று மாருதி சுஸுகி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வழக்கம்போல் அரசாங்க விதிகளை வைத்து தொடர்ந்து சுத்திகரிப்புப் பணிகளுடன் உற்பத்தி அங்கு நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








