கொரோனா எஃபெக்ட்... மாருதி கார் நிறுவனத்திற்கு பெரும் நஷ்டம்!
கொரோனா பிரச்னையால் நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது மாருதி கார் நிறுவனம். அந்நிறுவனம் வெளியிட்டுள்ள நிதி நிலை அறிக்கை குறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

கொரோனா பிரச்னையால் கடந்த மார்ச் இறுதியில் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், வர்த்தக ஸ்தாபனங்கள், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்தும் அடியோடு முடங்கியது. மேலும், தொழிற்சாலைகள் ஒரு மாதத்திற்கு மேல் மூடப்பட்டன.

குறிப்பாக, பல்லாயிரம் கோடி முதலீட்டுடன் செயல்பட்டு வரும் வாகன உற்பத்தி நிறுவனங்கள் பலத்த வருவாய் இழப்பை சந்தித்தன. கார், பைக் உள்ளிட்ட வாகனங்களின் விற்பனையும், உற்பத்தியும் இந்த காலத்தில் பூஜ்யமாக பதிவானது. குறிப்பாக, ஏப்ரல் மாதத்தில் ஒரு வாகனம் கூட உள்நாட்டில் விற்பனை செய்ய இயலாத நிலையை பெரும்பாலான நிறுவனங்கள் சந்தித்தன.

பொருளாதாரம் ஸ்தம்பித்துள்ளதை கருத்தில்கொண்டு, பாதுகாப்பு வழிகாட்டுதல்களுடன் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் செயல்பட மே மாதத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

இந்த நிலையில், நாட்டின் மிகப்பபெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகி, நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டு காலத்திற்கான நிதி நிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டு காலத்தில் ரூ.3,677 கோடி வருவாய் ஈட்டி இருப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும், நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டு காலத்தில் ரூ.249 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. எனினும், நிறுவனத்தை நடத்துவதற்கான செயல்பாட்டு செலவீனங்கள் குறைந்ததன் காரணமாக, நஷ்டம் ஓரளவு தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டு காலத்தில் 76,599 வாகனங்களை உற்பத்தி செய்துள்ளதாக மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது. இதில், உள்நாட்டில் 67,027 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மீதம் 9,572 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாருதி கார் நிறுவனத்தின் வரலாற்றிலேயே மிக மோசமான தருணமாக இது கருதப்படுகிறது. ஏனெனில், கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு கார் கூட விற்பனை செய்ய முடியவில்லை என்பதுடன், அடுத்தடுத்த மாதங்களில் கூட விற்பனை இயல்பு நிலைக்கு திரும்ப முடியாத நிலை தொடர்கிறது.


Click it and Unblock the Notifications







