விஸ்வரூபம் எடுத்த மாருதி சுஸுகி... வாயை பிளந்த போட்டி நிறுவனங்கள்... மேட்டர் என்னனு தெரியுமா?
கடந்த செப்டம்பர் மாதத்தில், மாருதி சுஸுகி நிறுவன கார்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி, கடந்த செப்டம்பர் மாதத்தில், தனது கார்களின் மொத்த உற்பத்தி 1,66,086 யூனிட்களாக உயர்ந்துள்ளதாக இன்று (அக்டோபர் 7ம் தேதி) அறிவித்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம், மாருதி சுஸுகி நிறுவனம் ஒட்டுமொத்தமாக 1,32,199 கார்களை மட்டுமே உற்பத்தி செய்திருந்தது.

இதன் மூலமாக மாருதி சுஸுகி கார்களின் ஒட்டுமொத்த உற்பத்தி 25.63 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டது. அதன்பின் இந்தியாவில் கார் உற்பத்தி மற்றும் விற்பனை அடியோடு முடங்கியது. அதன்பின் வந்த மாதங்களில் கார் விற்பனை மந்தமாக இருந்தது.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

ஆனால் சமீப காலமாக இந்தியாவில் கார்களின் விற்பனை படிப்படியாக அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பேருந்து, ஆட்டோ, டாக்ஸி உள்ளிட்ட பொது போக்குவரத்து வாகனங்களை தவிர்த்து விட்டு, சொந்த கார்களில் பயணம் செய்வதை மக்கள் பாதுகாப்பாக கருதுவதுதான் இதற்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக கார்களுக்கான தேவை உயர்ந்து வரும் நிலையில், மாருதி சுஸுகி நிறுவனத்தின் மொத்த கார்களின் உற்பத்தியும் குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளது. அதே சமயம் மாருதி சுஸுகி நிறுவனத்தின் பயணிகள் வாகன உற்பத்தியும் 24.1 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், பயணிகள் வாகன உற்பத்தி வெறும் 1,30,264 யூனிட்களாக மட்டுமே இருந்தது.

ஆனால் நடப்பாண்டு செப்டம்பர் மாதம் இந்த எண்ணிக்கை 1,61,668 யூனிட்களாக அதிகரித்துள்ளது. ஆல்டோ மற்றும் எஸ்-பிரெஸ்ஸோ ஆகிய மாடல்களை உள்ளடக்கிய மினி கார்கள் பிரிவில், மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23,073 யூனிட்களை உற்பத்தி செய்திருந்தது. அது தற்போது 30,492 யூனிட்களாக உயர்ந்துள்ளது. இது 32.15 சதவீத வளர்ச்சியாகும்.

அதே நேரம், வேகன்ஆர், செலிரியோ, இக்னிஸ், ஸ்விஃப்ட், பலேனோ, டிசையர் ஆகிய கார்களை உள்ளடக்கிய காம்பேக்ட் கார்கள் பிரிவில், மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், 75,264 யூனிட்களை மட்டுமே உற்பத்தி செய்திருந்தது. இந்த எண்ணிக்கை தற்போது 90,924 யூனிட்களாக உயர்ந்துள்ளது. இது 20.8 சதவீத வளர்ச்சியாகும்.

இதேபோன்று ஜிப்ஸி, எர்டிகா, எஸ்-க்ராஸ், விட்டாரா பிரெஸ்ஸா, எக்ஸ்எல்6 ஆகிய கார்களை உள்ளடக்கிய யுடிலிட்டி வாகனங்கள் பிரிவிலும், கார்களின் உற்பத்தி 44.55 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த பிரிவில் மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 18,435 கார்களை மட்டுமே உற்பத்தி செய்திருந்தது.

இந்த எண்ணிக்கை நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 26,648 யூனிட்களாக உயர்ந்துள்ளது. மாருதி சுஸுகியின் பயணிகள் வாகனங்களை போலவே, அதன் இலகுரக வர்த்தக வாகனமான சூப்பர் கேரியின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 1,935 சூப்பர் கேரி வாகனங்களை மட்டுமே உற்பத்தி செய்திருந்தது.

இந்த எண்ணிக்கை நடப்பாண்டு செப்டம்பர் மாதத்தில் 4,418 யூனிட்களாக உயர்ந்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவன கார்களின் உற்பத்தி அதிகரித்திருப்பது, கொரோனா வைரஸ் பிரச்னையால் ஏற்பட்ட பெரும் வீழ்ச்சியில் இருந்து இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை மீண்டு வருவதற்கான அறிகுறியாகவும் பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








