மாருதி வேகன் ஆர், பலேனோ கார்களுக்கு ரீகால் அறிவிப்பு!
எஞ்சினுக்கு எரிபொருள் செலுத்தும் அமைப்பில் உள்ள கோளாறு காரணமாக, மாருதி வேகன் ஆர் மற்றும் பலேனோ கார்கள் திரும்ப அழைக்கப்பட உள்ளன.

மாருதி கார் நிறுவனத்தின் டாப் -5 மாடல்களில் மாருதி வேகன் ஆர் மற்றும் பலேனோ கார்கள் முக்கிய இடத்தை வகித்து வருகின்றன. இரு கார்களும் இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் மாடல்களிலும் டாப் -5 இடங்களில் உள்ளன. இந்த கார்கள் வாடிக்கையாளர்களின் அதிக நம்பகத்தன்மையை பெற்ற மாடல்களாகவும் உள்ளன.

இந்த நிலையில், குறிப்பிட்ட கால இடைவெளியில் உற்பத்தி செய்யப்பட்ட மாருதி வேகன் ஆர் மற்றும் பலேனோ கார்களின் முக்கிய உதிரிபாகத்தில் குறைபாடு இருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது, எரிபொருள் கலனிலிருந்து எஞ்சினுக்கு எரிபொருள் செலுத்தும் ஃப்யூவல் பம்ப்பில் குறைபாடுடைய பாகம் இடம்பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, குறைபாடு இருப்பதாக கருதப்படும், 1,34,885 கார்களை திரும்ப அழைத்து பரிசோனை செய்ய மாருதி திட்டமிட்டுள்ளது.

இதில்,கடந்த 2018ம் ஆண்டு நம்பர் மாதம் முதல் அக்டோபர் 15ந் தேதி வரை உற்பத்தி செய்யப்பட்ட 56,663 வேகன் ஆர் கார்களும், கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 8 முதல் நவம்பர் 4 வரை உற்பத்தி செய்யப்பட்ட 78,222 பலேனோ கார்களும் அடங்கும்.

இந்த கார்களில் குறைபாடு இருக்கிறதா என்று பரிசோதித்து பின்னர் புதிய ஃப்யூவல் பம்பர் பொருத்தித் தரப்படும். இதற்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது.

குறைபாடுடைய இருப்பதாக கருதப்படும் கார்களின் உரிமையாளர்களுக்கு டீலர்கள் வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டு, பரிசோதனை செய்யப்பட உள்ளது. இதுதொடர்பாக, மாருதி இணையதளத்தில் உள்ள வசதி மூலமாகவும் வின் நம்பரை கொடுத்து தங்களது கார் இந்த திரும்ப பெறும் நடவடிக்கையில் உள்ளதா என வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ள முடியும்.

கடந்த ஆண்டு மாருதி சியாஸ், எர்டிகா, எக்ஸ்எல்6 கார்கள் இதேபோன்று திரும்ப அழைக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது நினைவுகூறத்தக்கது. தற்போது மாருதி நிறுவனம் வாடிக்கையாளர்கள் நலன் கருதி, மாருதி வேகன் ஆர் மற்றும் பலேனோ கார்களை தானாக முன்வந்து இந்த திரும்ப பெறும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது வரவேற்கத்தக்க விஷயமாகவே பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








